வேலையின்றி, வருமானமின்றி ஊரடங்கால் ஓய்ந்துபோன தினக்கூலித் தொழிலாளர்கள்; பிளாட்பாரத்தில் பொழுதை கழிக்கின்றனர்


வேலையின்றி, வருமானமின்றி ஊரடங்கால் ஓய்ந்துபோன தினக்கூலித் தொழிலாளர்கள்; பிளாட்பாரத்தில் பொழுதை கழிக்கின்றனர்
x
தினத்தந்தி 22 May 2021 10:40 PM GMT (Updated: 22 May 2021 10:40 PM GMT)

வேலையின்றி, வருமானமின்றி ஊரடங்கால் ஓய்ந்துபோன தினக்கூலித் தொழிலாளர்கள், சென்னையில் பிளாட்பாரத்தில் தங்கி பொழுதைக் கழித்து வருகின்றனர்.

தமிழகத்தை மிரட்டும் 2-வது அலை
கடந்த ஆண்டு கொரோனா முதல் அலையின்போது அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கில் சிறு, குறு தொழில்கள் மட்டும் அல்லாது, பெருந் தொழில்களும் பாதிக்கப்பட்டன. அப்போது பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாலும், போலீஸ் கெடுபிடி அதிகரித்ததாலும், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்தனர். இதனால் கொரோனா நோய் தொற்று பரவல் குறைந்தது என்ற நல்ல செய்தி வந்தாலும், வேலையின்மை, பசி, பட்டினி போன்ற இன்னல்களையும் பொதுமக்கள் சந்திக்க வேண்டியிருந்தது. இந்தநிலையில், கொரோனா பாதிப்பு குறைந்து சகஜநிலைக்குத் திரும்பிவந்து கொண்டிருந்த நேரத்தில், தற்போது கொரோனா 2-வது அலை தமிழகத்தை மீண்டும் மிரட்டி வருகிறது.

தினக்கூலிகள் பாதிப்பு
அதனால், கொரோனாவை ஒழிக்க தமிழக அரசு தளர்வற்ற முழு ஊரடங்கு என்ற ஆயுதத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளது. கடைகள், வணிக வளாகங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. பல திருமணங்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இதனால் தினக்கூலிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். காலி மதுபான பாட்டிகள், தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்ட மக்கள் பயன்படுத்தி கீழே போட்ட பொருட்களைச் சேகரித்து அதன் மூலம் தினமும் குறைந்தபட்ச வருமானம் ஈட்டி பிழைப்பு நடத்துபவர்களும் இந்த முழு ஊரடங்கால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் நடமாட்டமும் இல்லாததால், தங்க இடமில்லாத பலர் சென்னை எழும்பூர் ஈ.வெ.ரா. பெரியார் சாலையில் பிளாட்பாரத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்கள் தன்னார்வலர்கள் மூலம் வழங்கப்படும் உணவுகளை சாப்பிட்டு பசியாற்றி வருகின்றனர். வேலையும் இல்லாமல், சொந்த ஊருக்குப் போகவும் முடியாமல், பிளாட்பாரத்தில் தங்கியிருக்கும் அவர்கள் சக நண்பர்களுடன் தாயம் விளையாடி பொழுதைக் கழிக்கின்றனர்.

தங்குவதற்கு இடம்
அவர்கள் கூறும்போது, ‘நாங்கள் வெவ்வேறு ஊரைச் சேர்ந்தவர்கள். பிழைப்புக்காக சென்னை வந்தோம். இங்கே ஏதோ சின்னச் சின்ன வேலைகளைச் செய்து அதன் மூலம் கிடைக்கும் வருமானம் மூலம் 
பசியைப் போக்கிக்கொண்டிருந்தோம். சென்டிரல், மெரினா, கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் இரவு நேரங்களில் தங்கிக்கொள்வோம். எங்களுக்கு வீடும் கிடையாது, உறவுகளும் கிடையாது. கிடைத்த இடத்தில் சாப்பிட்டு, கிடைத்த இடத்தில் தூங்குவோம். தற்போது முழு ஊரடங்கால் எங்கேயும் வேலை இல்லை. பஸ், ரெயில் நிலையங்களில் தங்கிக்கொள்ள போலீசாரும் அனுமதிக்கவில்லை. மழை வந்தால் ஒதுங்கவும் இடம் இல்லை. ஏதோ வசதி படைத்தவர்கள் கொண்டு வரும் உணவை வாங்கி நாங்கள் தற்சமயம் ஒரு வேளையா௳து பசியாற்றுகிறோம். நாங்கள் தங்குவதற்கு அரசு ஏதேனும் 
ஏற்பாடு செய்து கொடுத்தால் உதவியாக இருக்கும்’ என்றனர்.

Next Story