மருத்துவ படிப்புகளுக்கு ‘நீட்’ தேர்வு கூடாது; மத்திய மந்திரிகள் ஆலோசனை கூட்டத்தில் உயர்கல்வி அமைச்சர் பொன்முடி வலியுறுத்தல்


மருத்துவ படிப்புகளுக்கு ‘நீட்’ தேர்வு கூடாது; மத்திய மந்திரிகள் ஆலோசனை கூட்டத்தில் உயர்கல்வி அமைச்சர் பொன்முடி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 23 May 2021 9:59 PM GMT (Updated: 23 May 2021 9:59 PM GMT)

மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு கூடாது, பழைய நடைமுறைப்படி மாணவர் சேர்க்கையை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று மத்திய மந்திரிகள் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வலியுறுத்தினார்.

மத்திய மந்திரிகள்ஆலோசனை கூட்டம்
ஜே.இ.இ. உள்பட மத்திய அரசு சார்ந்த படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுகள் கொரோனா நோய்த்தொற்று காரணமாக நடத்த முடியாமல் ஒத்திவைக்கப்பட்டு இருக்கின்றன. இந்த நிலையில் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள கொரோனா நோய்த் தொற்று நிலையை கேட்பதற்காகவும், நுழைவுத்தேர்வு நடத்துவது தொடர்பாக ஆலோசனையை கேட்பதற்காகாவும், மத்திய அரசு உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தை நேற்று நடத்தியது. காணொலி காட்சி வழியாக நடந்த இந்த கூட்டத்துக்கு மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் தலைமை தாங்கினார். இதில் மத்திய கல்வி மந்திரி ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிருதி இரானி மற்றும் மத்திய கல்வி வாரிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள கல்வித்துறை மந்திரிகளும், செயலாளர்களும் கலந்து கொண்டனர்.

‘நீட் தேர்வு நடத்தக்கூடாது’
அந்த வகையில் தமிழகத்தின் சார்பில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்தக கூட்டத்தில் மத்திய மந்திரிகள், நோய்த்தொற்றுக்கு மத்தியில் மத்திய அரசின் நுழைவுத்தேர்வுகளை நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்கள்.அப்போது தமிழக அரசு தரப்பில் கலந்து கொண்ட அமைச்சர் பொன்முடி சில கருத்துகளை முன்வைத்தார்.குறிப்பாக, மருத்துவ படிப்புகளுக்கு நடத்தப்படும் நுழைவுத்தேர்வான நீட் தேர்வை நடத்தக்கூடாது என்ற தமிழக அரசின் நிலைப்பாட்டை அவர் வலியுறுத்தினார்.மேலும், நீட் தேர்வுக்கு பதிலாக, முன்பு மாநில அரசு பின்பற்றி வந்த நடைமுறையின்படியே மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கையை நடத்திக்கொள்ள வேண்டும் என்று முதல்-அமைச்சர் அறிவுறுத்திய கருத்துகளையும் முன்வைத்ததாக தகவல்கள் கூறுகின்றன.

பொன்முடி பேட்டி

இதையடுத்து கூட்டம் முடிந்து வெளியே வந்த உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி நிருபர்களிடம் கூறியதாவது:-

தேசிய கல்வி கொள்கையை நாங்கள் ஏற்கனவே ஏற்க முடியாது என்று தெரிவித்துவிட்டோம். மத்திய அரசின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்களில் உள்ள என்ஜினீயரிங், விவசாய படிப்புகளில் சேருவதற்கு நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.அதேபோல், நீட் தேர்வும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் மருத்துவ கல்லூரிகளில் மட்டும் நடத்த வேண்டும். மாநிலத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் ஏற்கனவே நாங்கள் நீட் தேர்வுக்கு முன்பு பின்பற்றிய நடைமுறையின்படி, தேர்வை நடத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் கூறிய கோரிக்கையை வலியுறுத்தினோம். அந்த கோரிக்கை எந்த அளவுக்கு ஏற்கப்படும் என்பது போக போகத்தான் தெரியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து நிருபர்கள், “என்ஜினீயரிங் படிப்புக்கும் நுழைவுத்தேர்வு நடத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறதே?” என்று கேள்வியெழுப்பினர். அதற்கு அவர், “அவர்கள் அப்படி என்ஜினீயரிங் படிப்புக்கும் நுழைவுத்தேர்வு நடத்தினால் எதிர்ப்போம்” என்று பதில் அளித்தார்.

Next Story