டாஸ்மாக் மூடல்: நவீன முறையில் வீட்டில் சாராயம் காய்ச்சிய மாமனார், மருமகன் கைது


டாஸ்மாக் மூடல்: நவீன முறையில் வீட்டில் சாராயம் காய்ச்சிய மாமனார், மருமகன் கைது
x
தினத்தந்தி 24 May 2021 8:15 AM GMT (Updated: 24 May 2021 8:15 AM GMT)

பள்ளிபாளையம் அருகே நவீன முறையில் வீட்டில் சாராயம் காய்ச்சிய மாமனார், மருமகனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

பள்ளிபாளையம் : 

கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் டாஸ்மாக் மதுக்கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனை பயன்படுத்தி மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி வைத்துக்கொண்டு சந்து கடைகளில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாகவும், கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருவதாகவும் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் திருச்செங்கோடு மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகுமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் கவுதம், வெற்றிவேல், ஏட்டு ராமு ஆகியோர் ரங்கனூர் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது,  பள்ளிபாளையத்தை அடுத்துள்ள வெப்படை ரங்கனூர் சுக்கராயன்காடு பகுதியைச் சேர்ந்த விவசாயி கருப்பண்ணன்(67), அவரது மருமகன் மணிகண்டன்(28) ஆகிய இருவரும் சேர்ந்து சாராயம் காய்ச்சி வருவது தெரிய வந்தது. உடனே, சம்பவ இடம் விரைந்தனர். அங்கு கருப்பண்ணன் வீட்டில் நவீன முறையில் சாராயம் காய்ச்சிக்கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

வழக்கமாக சாராயம் காய்ச்சுவதற்காக பாரம்பரிய முறைப்படி மண்பானைகள் மற்றும் விறகு அடுப்பினை பயன்படுத்துவது வழக்கம். ஆனால், துரித கதியில் சாராயம் காய்ச்சி வடிக்கும் வகையில், விறகு அடுப்பிற்கு பதிலாக எரிபொருளாக சமையல் காஸ் மற்றும் மண்பானைகளுக்கு பதிலாக டிரம்களில் ஊறலை ஊற்றி காய்ச்சி சாராயம் வடித்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதுதொடர்பாக இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து சாராயம் மற்றும் 100 லிட்டர் ஊறலை கைப்பற்றி அழித்தனர். 

Next Story