முழு ஊரடங்கு: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பவுர்ணமி கிரிவலத்துக்கு அனுமதி கிடையாது - கலெக்டர் தகவல்


முழு ஊரடங்கு: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பவுர்ணமி கிரிவலத்துக்கு அனுமதி கிடையாது - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 24 May 2021 6:56 PM GMT (Updated: 24 May 2021 6:56 PM GMT)

முழு ஊரடங்கால் பவுர்ணமி கிரிவலத்துக்கு அனுமதி கிடையாது என்றும், பக்தர்கள் யாரும் வரவேண்டாம் என கலெக்டர் சந்தீப் நந்தூரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் தூரம் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் வருவதற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.

இந்த நிலையில் கொரோனா தொற்று பரவலை தடுக்க கடந்த ஆண்டு 24.3.2020 முதல் ஊரடங்கு பிறப்பித்து தற்போது தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் நேற்று முதல் ஒருவார காலத்திற்கு தளர்வுகளுமின்றி முழு ஊரடங்கு அமலில் உள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் நடைபெறும் நாட்களான இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 8.02 மணி முதல் நாளை (புதன்கிழமை) மாலை 5.36 வரை மலையை பக்தர்கள் கிரிவலம் வருவதற்கு அனுமதி கிடையாது.

இதனால் பவுர்ணமி கிரிவலத்துக்கு வரவேண்டாம் என பக்தர்கள், பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறது. தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி கொரோனா பரவல் கட்டுப்படுத்தவும், பொதுமக்களை பாதுகாக்கவும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இந்த தகவலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.

Next Story