தமிழகத்துக்கு கொரோனா தடுப்பூசி குறைவாக ஒதுக்கீடு மத்திய அரசு மீது ஐகோர்ட்டு அதிருப்தி


தமிழகத்துக்கு கொரோனா தடுப்பூசி குறைவாக ஒதுக்கீடு மத்திய அரசு மீது ஐகோர்ட்டு அதிருப்தி
x
தினத்தந்தி 24 May 2021 9:59 PM GMT (Updated: 24 May 2021 9:59 PM GMT)

தமிழகத்துக்கு கொரோனா தடுப்பூசி மருந்துகள் குறைந்த அளவில் ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய அரசு மீது சென்னை ஐகோர்ட்டு அதிருப்தி தெரிவித்துள்ளது.

சென்னை,

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கு ஒன்றை விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்த வழக்கில் அவ்வப்போது மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து வருகிறது.

இந்தநிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

குறைவான பலி

அப்போது, தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள் சார்பில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. தமிழக அரசு சார்பில் சுகாதார துறை செயலாளர் தாக்கல் செய்த அறிக்கையில், ‘‘கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இந்திய அளவில் தமிழகத்தில் தான் பலி எண்ணிக்கையும் குறைவாக உள்ளது.

ஒடிசா மாநிலத்தில் இருந்து 146 டன் ஆக்சிஜன் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தாலும், அவை முழுமையாக கிடைக்கவில்லை. யாஸ் புயல் நெருங்கி வருவதால் ஒடிசாவில் இருந்து ஆக்சிஜன் சப்ளை நிறுத்தப்படலாம்’’ என்று கூறியிருந்தார். அதேபோல, மத்திய அரசு சார்பில் கொரோனா பரவல் தடுப்பு எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

216 கோடி தடுப்பூசி

பின்னர் மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன், ‘‘சீரம், பாரத் பயோடெக் நிறுவனங்கள் மூலம் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி உற்பத்திக்கு பல நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் 216 கோடி டோஸ் தடுப்பூசிகள் தயாராகி விடும்’’ என்று கூறினார்.

இதையடுத்து நீதிபதிகள் கூறியதாவது:-

நேரடி கொள்முதல்

மத்திய அரசு தமிழகத்துக்கு குறைவான அளவில் தடுப்பூசி மருந்துகள் ஒதுக்கீடு செய்துள்ளது அதிருப்தி அளிக்கிறது. தடுப்பூசி உற்பத்தி வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து மாநில அரசுகள் நேரடியாக தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது.

எனவே, தமிழகத்துக்கான தடுப்பூசி ஒதுக்கீட்டை மத்திய அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும்.

அதேபோல யாஸ் புயல் காரணமாக ஒடிசாவில் இருந்து ஆக்சிஜன் பெறுவதில் இடையூறு ஏற்பட்டுள்ளது. அதனால், பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு மத்திய அரசு ஆக்சிஜன் ஒதுக்க வேண்டும்.

விழிப்புணர்வு

தடுப்பூசி தொடர்பாக மக்கள் மத்தியில் நிலவும் மூடநம்பிக்கைகளை களைந்து, தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். விசாரணையை 27-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம்.

இவ்வாறு கூறியுள்ளனர்.

Next Story