என் உயிர் உள்ளவரை அரசியலில் இருப்பேன் அரசியல் இருக்கும் வரை மக்கள் நீதி மய்யம் இருக்கும் நடிகர் கமல்ஹாசன் உருக்கம்


என் உயிர் உள்ளவரை அரசியலில் இருப்பேன் அரசியல் இருக்கும் வரை மக்கள் நீதி மய்யம் இருக்கும் நடிகர் கமல்ஹாசன் உருக்கம்
x
தினத்தந்தி 24 May 2021 11:03 PM GMT (Updated: 24 May 2021 11:03 PM GMT)

என் உயிர் உள்ளவரை அரசியலில் இருப்பேன் என்றும், அரசியல் இருக்கும்வரை மக்கள் நீதி மய்யம் இருக்கும் என்றும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இதைத்தொடர்ந்து மாநில நிர்வாகிகள் பலர் கட்சியில் இருந்து விலகினர்.

சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வி, மாநில நிர்வாகிகள் விலகல் அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் மிகுந்த கவலையை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன், கட்சி தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் உருக்கமான வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோ பதிவில் அவர் பேசி இருப்பதாவது:-

பாதுகாவலனாய் இருப்பேன்

மாற்றம் என்றும் மாறாதது. அரசியல் மாற்றம் நாட்டில் ஏற்படவில்லை. நேர்மை வழியில் மாற்றத்தை தேடுபவர்களாய் நாம் உள்ளவரையில் நம் கொடி புத்தொளியோடு பறந்து கொண்டே இருக்கும். மூச்சு உள்ளவரை அதன் பாதுகாவலனாய் நான் இருப்பேன்.

நான் ஒரு சிறு விதை தான். இந்த விதை விழுந்தது, வீழ்த்துவோம் என்று கொக்கரிக்கும் பழைய புள்ளிகளுக்கும், சுள்ளிகளுக்கும் ஒரு செய்தி. விதை விழுந்தாலும் மண்ணை பற்றி விட்டால் விரைவில் அது காடாகும். நாளை நமதாகும்.

அனுபவம் சொல்லும் பாடம்

தோல்வியை ஆராய்ந்து அதில் வெற்றிப்பாடம் கற்பது நாம் இதுவரை கண்ட சரித்திரம். மக்களிடம் முக அறிமுகம் இல்லாதவர்களையும், சற்றே தெரிந்தவர்களையும் புது எழுச்சி அரசியலின் நட்சத்திரங்களாக மின்ன வைக்க நாம் நினைத்தது தான் சிலருக்கு சர்வாதிகாரமாய் தெரிகிறது.

திறமையின் அடிப்படையில் பெரும் பொறுப்புகளை கட்சியில் சேர்ந்த சில நாட்களிலேயே தந்து வளர வழி செய்தது, அன்று அவர்களுக்கு ஜனநாயகத்தின் உச்சகட்டமாக தெரிந்து இருக்கிறது. பிறகு காலச்சூழலில் ஏற்பட்ட மறதியில் அது அவர்களுக்கு தெரியாமல் போய்விட்டது.

நம் மய்ய கிணறு (மக்கள் நீதி மய்யம்) அவ்வளவு சாதாரணமாக தூர்ந்து போய் விடாது என்பது தற்காலிக தாகசாந்திக்காக குடிக்க வந்தவர்களுக்கு புரியாது. 40 ஆண்டு காலம் இறைத்து நீர் வாரியதில் உடல் சற்றே வியர்த்தாலும் உற்சாக ஊற்று ஊறிக்கொண்டே இருக்கும் என்பது நமக்கு நம் அனுபவம் சொல்லும் பாடம்.

அசுத்தப்படுத்த விடமாட்டோம்

இதுதான் நாம் செய்யப்போகும் விவசாயம் என்று களமிறங்கி விட்ட நமக்கு நம் நீர் நிலையை சுற்றித்தான் வேலை. நாடோடிகள், யாத்ரீகர்கள் அப்படி அல்ல. ஓரிடம் தங்க மாட்டார்கள். வணிகர்களாக அவர்கள் இருக்கும்பட்சத்தில் வியாபாரம் உள்ளவரை தங்குவார்கள். பிறகு வெளியேறி விடுவார்கள்.

சிலநேரம் திரும்பவும் சென்ற வழியே வருவார்கள். இந்த ஊற்று அன்றும் சுரந்து கொண்டிருக்கும். ஆனால் மீண்டும் நம் நீர்நிலையை அவர்கள் அசுத்தப்படுத்த விடமாட்டோம் எனும் உறுதியுடன் நம் பணியை நேர்மையாக தொடர வேண்டும்.

உருமாறிய மக்கள் நீதி மய்யம்

மற்றபடி தன் தவறுகளை மறைக்க சிலர் எழுப்பும் பொய் குற்றச்சாட்டுகளுக்கு நாம் பதில் சொல்ல வேண்டியது இல்லை. காலம் பதில் சொல்லும். உண்மையெல்லாம் தெரிந்தும் ஊமையாக இருக்க சொல்கிறீர்களா? என வெகுண்டு குரல் எழுப்பும் தொண்டர்களுக்கு ஒரு வேண்டுகோள். உயிரே உண்மை பேசு. உறவே வாதாடு. என் அருமை தமிழே போதும் அதற்கு. மறந்தும் நம் மொழி மாசுபடாது இருக்கட்டும். நம் தரம் குறையாது இருக்கட்டும்.

கட்சி உள் கட்டமைப்பை தனி மனிதர்கள் தங்கள் ஆதாயத்துக்கு ஏற்ப மாற்றி ஆடிய விளையாட்டு இனி தொடராது. செயல் வீரர்கள், செயலாற்றுபவர்களின் கரங்கள் வலுப்படுத்தப்படும். உருமாறிய மக்கள் நீதி மய்யத்தை அனைவரும் விரைவில் காண்பார்கள். என் உயிர் உள்ளவரை அரசியலில் இருப்பேன். அரசியல் இருக்கும் வரை மக்கள் நீதி மய்யமும் இருக்கும்.

இவ்வாறு அவர் பேசி உள்ளார்.

Next Story