விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறிகளை சந்தைப்படுத்த அனுமதி தரப்பட்டுள்ளது - அமைச்சர் பன்னீர்செல்வம்


விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறிகளை சந்தைப்படுத்த அனுமதி தரப்பட்டுள்ளது - அமைச்சர் பன்னீர்செல்வம்
x
தினத்தந்தி 25 May 2021 7:16 AM GMT (Updated: 25 May 2021 7:16 AM GMT)

சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,400 மெட்ரிக் டன் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை, 

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மே 31ம் தேதி வரை தளர்வுகளற்ற ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த சூழலில், முழு ஊரடங்கின் போது, பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தங்குத்தடையின்றி விநியோகம் செய்வது தொடர்பாக, சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர் இறையன்பு, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பன்னீர்செல்வம், “தமிழகம் முழுவதும் 13,000 வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை நடைபெற்று வருகிறது. சென்னையில் 1,400 மெட்ரிக் டன் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் வாகனங்கள் மூலம் 4900 மெட்ரிக் டன் காய்கறி பழங்கள் அரசு சார்பில் மிகக்குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. காய்கறிகள், பழங்களின் விலை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்றும், கிராமங்களிலும் வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை செய்ய முதல்-அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறிகளை சந்தைப்படுத்த அனுமதி தரப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.

Next Story