பருப்பு கொள்முதல் டெண்டருக்கு விதித்த தடையை நீக்க வேண்டும்: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 27 May 2021 7:00 AM GMT (Updated: 27 May 2021 7:00 AM GMT)

பருப்பு கொள்முதல் டெண்டருக்கு விதித்த தடையை நீக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை, 

ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பருப்பு, பாமாயில் கொள்முதலுக்கான டெண்டரில் விதிமீறல் ஏற்பட்டிருப்பதால் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தால் வெளியிடப்பட்டுள்ள கொள்முதல் டெண்டர் அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் என கரூரை சேர்ந்த மணிகண்டன் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். டெண்டர் அறிவிப்பாணையை செயல்படுத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு நேற்று நீதிபதி வேலுமணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த இக்கட்டான சூழலில் மக்களின் தேவைக்காக அவசர கால டெண்டர் விடுக்கப்பட்டதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதைக் கேட்டுக் கொண்ட நீதிபதி, மணிகண்டன் தொடர்ந்த மனுவுக்கு விரிவான பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டதோடு பருப்பு, பாமாயில் கொள்முதல் டெண்டர் அறிவிப்பாணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார்.

இந்த நிலையில் பருப்பு, பாமாயில் டெண்டருக்கு இடைக்காலத் தடை விதித்ததை எதிர்த்து தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இதுகுறித்த மேல்முறையீட்டை மதுரை நீதிமன்றத்தில்தான் தொடரவேண்டும் என்றிருந்தாலும், தடைவிதித்த நீதிபதி தலைமையிலேயே இரு நீதிபதி அமர்வு இருப்பதால், சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் சரவணன் ஆகியோர் அமர்வில் தமிழக அரசு அவசர மேல்முறையீடு செய்துள்ளது.

அதில், இந்த டெண்டருக்கு தடை விதிக்கப்பட்டால் அரசு பருப்பு, பாமாயில் வழங்குவதில் குளறுபடி ஏற்படுவதுடன், பற்றாக்குறையும், தேக்கமும் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும் உரிய நிபந்தனைகளுக்கு உட்பட்டுத்தான் டெண்டர் விடப்பட்டதாகவும், எனவே இந்த வழக்கை உடனடியாக விசாரிக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள் தமிழக அரசின் மேல் முறையீடு மனுவை சென்னையிலேயே தாக்கல் செய்ய அனுமதி அளித்துள்ளனர். அதன்படி, இந்த வழக்கு இன்று மதியம் அல்லது நாளை காலை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story