பிஞ்சு உள்ளங்களின் பெருங்கருணை, நெஞ்சத்தை நெகிழ வைக்கிறது: கொரோனா நிதி வழங்கும் சிறுவர்களுக்கு திருக்குறள் அனுப்பி வைக்கப்படும் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


பிஞ்சு உள்ளங்களின் பெருங்கருணை, நெஞ்சத்தை நெகிழ வைக்கிறது: கொரோனா நிதி வழங்கும் சிறுவர்களுக்கு திருக்குறள் அனுப்பி வைக்கப்படும் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
x
தினத்தந்தி 28 May 2021 8:58 PM GMT (Updated: 28 May 2021 8:58 PM GMT)

கொரோனா நிதி வழங்கும் சிறுவர்களுக்கு திருக்குறள் அனுப்பி வைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை,

கொரோனா பெருந்தொற்று பேரிடரின் தாக்கத்தில் இருந்து தமிழகத்தை மீட்டெடுக்க, முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அனைத்து தரப்பினரும் தாராள நிதி வழங்கி உதவவேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தேன்.

அதனை ஏற்று பெரும் தொழிலதிபர்கள், நடுத்தர, சிறு, குறு தொழில் நடத்துவோர், திரையுலகினர், சமூகத்தில் வசதி படைத்தவர்கள் முதல் ஏழை, எளிய சாமானிய மக்கள் வரை அனைத்துத் தரப்பினரும், பெருந்தொற்றை முறியடித்தே தீரவேண்டும் என்ற பேரார்வத்துடனும், பேரன்புடனும் தங்களால் இயன்ற நிதியை இன்முகத்துடன் வழங்கி வருகிறார்கள் என்பதை அறிவீர்கள்.

திருக்குறள்

இதில், தங்களின் சின்னஞ்சிறு கனவுகளை அடைவதற்காக சிறுகச் சிறுகச் சேமித்து வைத்திருக்கும் சேமிப்பை வழங்க முன்வரும் பிஞ்சு உள்ளங்களின் பெருங்கருணை, என் நெஞ்சத்தை நெகிழ வைக்கிறது. எனவே, கொரோனா துயர் துடைக்க முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்காக தங்கள் சேமிப்பை வழங்க முன்வரும் சிறுவர்கள், சிறுமியர்கள் உள்ளிட்ட பிள்ளைச் செல்வங்கள் அனைவருக்கும் தமிழக அரசின் சார்பில், உலகப் பொதுமறையாம் திருக்குறள் நூல் ஒன்று அனுப்பிவைக்கப்படும் என்பதைக் கனிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

அற உணர்வு

‘‘ஈத லிசைபட வாழ்தல் அதுவல்ல

தூதிய மில்லை உயிர்க்கு’’

என்ற அய்யன் திருவள்ளுவரின் குறள்நெறிக்கு இணங்க, இளம் உள்ளங்களில் ஈகைப் பண்பையும், சக மனிதர்களை நேசிக்கும் அன்புணர்வையும் விதைத்திடும் நோக்கத்துடன் இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன். அன்னைத் தமிழ் மண்ணில் அற உணர்வு தழைத்தோங்கட்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story