உணவு கிடைக்காமல் பிராணிகள் அவதி: விலங்குகள் நல அமைப்புகளுக்கு முதற்கட்டமாக ரூ.3 லட்சம் தீவன பொருட்கள்; கால்நடை பராமரிப்புத்துறை வழங்கியது


உணவு கிடைக்காமல் பிராணிகள் அவதி: விலங்குகள் நல அமைப்புகளுக்கு முதற்கட்டமாக ரூ.3 லட்சம் தீவன பொருட்கள்; கால்நடை பராமரிப்புத்துறை வழங்கியது
x
தினத்தந்தி 29 May 2021 10:19 PM GMT (Updated: 29 May 2021 10:19 PM GMT)

உணவு கிடைக்காமல் அவதிப்படும் பிராணிகளின் பசி போக்க, கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் முதற்கட்டமாக ரூ.3 லட்சம் மதிப்பிலான தீவன பொருட்கள் விலங்குகள் நல அமைப்புகளுக்கு வழங்கப்பட்டது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

உணவு கிடைக்காமல் தவிக்கும் பிராணிகள்

தற்போது நிலவும் கொரோனா ஊரடங்கு காலத்தில், வீதிகளில் போதிய உணவு கிடைக்காமல் அல்லல்படும் கால்நடைகளுக்கு (நாய்கள், பூனைகள், குதிரைகள் போன்றவை) உணவு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு துரிதமாக மேற்கொண்டு வருகிறது.உணவு கிடைக்காமல் அல்லல்படும் கால்நடைகளின் துன்பத்தை தணிக்க சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் அனைத்து மாவட்ட நிர்வாகங்கள், கால்நடை பராமரிப்பு மண்டல இணை இயக்குனர்கள், தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் மற்றும் இதர விலங்கு நல அமைப்புகள், தனி நபர்கள் மூலம் சென்னை பெருநகரம் மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

தீவன பொருட்கள்

இந்த விலங்குகளுக்கு ஊரடங்கு காலத்தில் உணவு தொடர்ந்து கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் தமிழ்நாடு பிராணிகள் நல வாரியம் செயல்பட்டு வருகிறது. மேலும் சென்னை ஐகோர்ட்டால் ஒரு குழு அமைக்கப்பட்டு கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ பணிகள் துறை மூலம் ஆதரவற்ற நாய்கள், பூனைகள், குதிரைகளுக்கு தேவைப்படும் தீவனப் பொருட்களை கொள்முதல் செய்து விலங்குகள் நல அமைப்பின் மூலம் வினியோகிக்க அறிவுறுத்தப்பட்டது.

முதற்கட்டமாக சுமார் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் 1,250 கிலோ அரிசி, 220 கிலோ நாய் உலர் தீவனம், 525 கிலோ குதிரைகளுக்கான தீவனம், ஆவின் நிறுவனத்தின் மூலம் 625 கிலோ பால் பவுடர் முதலானவை இன்று (நேற்று) கால்நடை பராமரிப்புத்துறை இயக்குனரால், மேற்கண்ட விலங்குகள் நல ஆர்வலர்கள் மற்றும் விலங்குகள் நல அமைப்புகளுக்கு வழங்கப்பட்டன. இதன் மூலம் சுமார் 15 நாட்களுக்கு 1,000-க்கும் மேற்பட்ட விலங்குகள் பயன்பெறும்.

தக்க நடவடிக்கை

கொரோனா ஊரடங்கு காலத்தில் இத்தகைய பணிகள் தங்கு தடையின்றி நடைபெற கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப்பணிகள் துறை மூலம் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story