சென்னை அரசு பொது ஆஸ்பத்திரியில் ஆம்புலன்சுகள் வரிசை கட்டி நின்றுகொண்டிருந்த நிலை மாறியது; ஆக்சிஜன் வசதியுடன் ஏராளமான படுக்கைகள் தயார்
கொரோனா தொற்று விறுவிறுவென்று அதிகரித்து வந்த நிலையில், ஆக்சிஜன் வசதியுடன் சிகிச்சை பெறுவதற்காக சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் ஆம்புலன்சுகள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டது.
சரியான நேரத்துக்கு ஆக்சிஜன் வசதியுடன் சிகிச்சை கிடைக்காததால், ஆம்புலன்சில் இருந்தபடியே சில உயிர்கள் பிரிந்ததும் வேதனையை அளித்தது. அது தொடர்பான செய்திகளும் வெளியாகின. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களுக்கு ஆக்சிஜன் வசதியுடன்கூடிய படுக்கைகளுக்கு ஏற்பாடு செய்யும் முனைப்பில் அரசு தீவிர கவனம் செலுத்த தொடங்கியது.
சென்னையில் பல இடங்களில் ஆக்சிஜன் படுக்கைகள் தயார்படுத்தப்பட்டன. இதனால் சென்னை அரசு ஆஸ்பத்திரிகள் முன்பு நீண்ட வரிசையில் ஆம்புலன்சில் இருந்தபடி சிகிச்சை பெற்ற அவலநிலை தற்போது மாறி இருக்கிறது.அதிலும் குறிப்பாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது ஆஸ்பத்திரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நோயாளிகளை சிகிச்சைக்கு அனுமதிப்பதற்காக நின்றன. ஆனால் தற்போது படுக்கை வசதிகள் அதிகரித்ததைத் தொடர்ந்து, வெகு நாட்களுக்கு பிறகு நேற்று அரசு பொது ஆஸ்பத்திரி முன்பு ஆம்புலன்ஸ் வாகனங்கள் இல்லாமல் வெறிச்சோடி இருந்தது. ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய ஏராளமான படுக்கைகள் தயார்நிலையில் உள்ளதாகவும் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Related Tags :
Next Story