ஸ்டெர்லைட் ஆலையில் 2-வது ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் சோதனை ஓட்டம் தொடக்கம்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 30 May 2021 9:06 PM GMT (Updated: 30 May 2021 9:06 PM GMT)

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள 2-வது ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் நேற்று முதல் சோதனை ஓட்டம் தொடங்கியது.

தூத்துக்குடி, 

கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளுக்கு வருபவர்களுக்கு தேவையான ஆக்சிஜன் வழங்குவதற்காக கடந்த 13-ந் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் மருத்துவ தேவைக்கான ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டது. அதன்பிறகு உற்பத்தி நிலையத்தில் உள்ள குளிர்விக்கும் பகுதியில் திடீரென பழுது ஏற்பட்டது. இந்த பழுது நீக்கம் செய்யப்பட்டு கடந்த 19-ந் தேதி முதல் மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தி நடந்து வருகிறது.

இங்கு உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் தென்மாவட்டங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு அதிகளவில் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதுவரை ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 316 டன் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்து வினியோகம் செய்யப்பட்டு உள்ளது. தினமும் சராசரியாக 30 டன் வரை ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள 2 ஆக்சிஜன் உற்பத்தி பிரிவில், ஒரு பிரிவில் மட்டுமே தற்போது ஆக்சிஜன் உற்பத்தி நடந்து வருகிறது. இந்த நிலையில் 2-வது உற்பத்தி பிரிவிலும் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் பராமரிப்பு பணிகள் முடிக்கப்பட்டு நேற்று மதியம் முதல் சோதனை ஓட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.

சோதனை ஓட்டம் முடிந்தபிறகு மருத்துவத்துக்கு ஏற்ற ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது. 2 உற்பத்தி பிரிவுகளிலும் மொத்தம் 70 டன் திரவ ஆக்சிஜனை உற்பத்தி செய்ய முடியும். மீதம் உள்ள ஆக்சிஜனை, வாயு நிலையிலேயே சிலிண்டர்களில் அடைப்பதற்கான உபகரணங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த பணிகள் முடிக்கப்பட்டு ஒரு வாரத்துக்குள் சிலிண்டர்களிலும் ஆக்சிஜன் நிரப்பும் பணி தொடங்கும் என்று கூறப்படுகிறது.


Next Story