வாகன சோதனையில் இருந்து தப்ப குறுக்கு வழியில் சென்றபோது மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி வாலிபர் பலி


வாகன சோதனையில் இருந்து தப்ப குறுக்கு வழியில் சென்றபோது மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி வாலிபர் பலி
x
தினத்தந்தி 31 May 2021 1:12 AM GMT (Updated: 31 May 2021 1:12 AM GMT)

வாகன சோதனையில் இருந்து தப்ப குறுக்கு வழியில் சென்றபோது பரிதாபம் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி சென்னை வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

திருவாரூர், 

திருவாரூர் அருகே உள்ள எண்கண் கீழகாலனி பகுதியை சேர்ந்தவர் அழகுசுந்தரம் (வயது 28). சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி சரண்யா (25). இவர்களுக்கு திருமணமாகி 6 மாதங்கள் ஆகின்றன.

நேற்று அழகுசுந்தரம் தனது மனைவியுடன் நன்னிலம் அருகே வண்டாம்பாளை கிராமத்தில் உள்ள தனது மாமனார் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். ஊரடங்கு என்பதால் ஆங்காங்கே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில் அழகுசுந்தரம், மணக்கால் வழியாக குறுக்கு வழியில் வண்டாம்பாளை நோக்கி மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றார்.

மணக்கால்- கங்களாஞ்சேரி சாலையில் நீலக்குடியில் உள்ள மத்திய பல்கலைக்கழகம் பகுதியில் சென்றபோது எதிரே வந்த ஒரு லாரி, மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் அழகுசுந்தரம், சரண்யா ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர். ஆபத்தான நிலையில் இருந்த இருவரையும் திருவாரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அழகுசுந்தரம் பரிதாபமாக இறந்தார்.

அவருடைய மனைவி சரண்யா, மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Next Story