வேலூரில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியை கொரோனாவுக்கு பலி மகனும் இறந்த பரிதாபம்


வேலூரில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியை கொரோனாவுக்கு பலி மகனும் இறந்த பரிதாபம்
x
தினத்தந்தி 31 May 2021 1:28 AM GMT (Updated: 31 May 2021 1:28 AM GMT)

வேலூரில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியை கொரோனாவுக்கு பலி மகனும் பரிதாபமாக இறந்துவிட்டார்.

வேலூர், 

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு, டவுன் திரு.வி.க. நகரைச் சேர்ந்தவர் ஆசைத்தம்பி, ஓய்வு பெற்ற கல்வித்துறை அதிகாரி. இவரது மனைவி கிருபாவதி (வயது 66). ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை. கடந்த 23-ந் தேதி இவர்களது மகன் வைரம் என்ற வைரமுத்துவுக்கு (38) கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அதன்பிறகு அவருடைய தாயாரான ஓய்வு பெற்ற தலைமையாசிரியை கிருபாவதிக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அதைத்தொடர்ந்து கிருபாவதியும் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் கிருபாவதி மற்றும் மகன் உடல்நிலை ஆபத்தான கட்டத்தை எட்டியது. நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி கிருபாவதி இறந்தார். அதே மருத்துவமனையில் மகன் வைரமுத்துவும் நேற்று அதிகாலையில் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தாயும், மகனும் அடுத்தடுத்து இறந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story