நடிகை சாந்தினி புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு 6 சட்டப்பிரிவுகளில் குற்றச்சாட்டு


நடிகை சாந்தினி புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு 6 சட்டப்பிரிவுகளில் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 31 May 2021 1:58 AM GMT (Updated: 31 May 2021 1:58 AM GMT)

நடிகை சாந்தினி கொடுத்த புகாரின் பேரில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது 6 சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சென்னை, 

சென்னை பெசன்ட்நகரில் வசித்து வருபவர் சாந்தினி. நாடோடிகள் சினிமா படத்தில் நடித்துள்ளார். மலேசியா நாட்டின் குடியுரிமை பெற்ற இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பரபரப்பு புகார் மனு ஒன்றை கொ டுத்தார்.

அந்த புகார் மனுவில், மணிகண்டன் என்னை திருமணம் செய்வதாக சொன்னார். 5 வருடங்கள் நானும், அவரும் கணவன்-மனைவி போல வாழ்ந்தோம். 3 முறை அவர் மூலம் கர்ப்பம் அடைந்தேன். அவரது மிரட்டலின் பேரில் கருவை கலைத்தேன். இப்போது என்னை திருமணம் செய்ய மறுத்து அவர் கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார், என்று தெரிவித்து இருந்தார்.

இந்த புகார் மனு மீது அடையாறு அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இந்த புகாரை மணிகண்டன் மறுத்து பேட்டி கொடுத்தார். நடிகை சாந்தினி யார், என்றே எனக்கு தெரியாது என்று கூறினார். பணம் பறிக்கும் கும்பல் பின்னணியில் இந்த பொய்யான புகார் கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் தனது பேட்டியில் தெரிவித்து இருந்தார்.

இந்தநிலையில் மணிகண்டன் மீது கொலை மிரட்டல், திருமணம் செய்வதாக ஏமாற்றுதல் போன்ற 6 சட்டப்பிரிவுகளின் கீழ் அடையாறு அனைத்து மகளிர் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர். அடுத்த கட்டமாக மணிகண்டனிடம் விசாரணை நடத்தி அவர் மீது கைது நடவடிக்கை பாயும் என்று தெரிகிறது.


Next Story