கோவில் பூசாரிகள், பணியாளர்களுக்கு ரூ.4 ஆயிரம் - தமிழகஅரசு அறிவிப்பு


கோவில் பூசாரிகள், பணியாளர்களுக்கு ரூ.4 ஆயிரம் - தமிழகஅரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 1 Jun 2021 12:34 AM GMT (Updated: 1 Jun 2021 12:34 AM GMT)

கோவில் பூசாரிகள் மற்றும் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ரூ.4 ஆயிரம் உதவித்தொகை, 10 கிலோ அரிசி மற்றும் 15 வகை மளிகைப்பொருட்கள் வழங்கப்படும் என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை,

இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் சுமார் 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. அவற்றில் சுமார் 34 ஆயிரம் கோவில்களின் ஆண்டு வருமானம் ரூ.10 ஆயிரத்துக்கும் கீழ் மட்டுமே. 12 ஆயிரத்து 959 கோவில்களில் ‘ஒரு கால பூஜைத்திட்டம்’ அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள் மற்றும் பிற பணியாளர்களுக்கு நிலையான சம்பளம் ஏதும் வழங்கப்படுவதில்லை.

கொரோனா நோய் பெருந்தொற்று காரணமாக கோவில்களில் பக்தர்கள் வருகை இல்லாததால் போதிய வருமானமின்றி அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் மற்றும் பிற பணியாளர்கள் வாழ்வாதாரத்தினை இழந்து தவிக்கின்றனர்.

பக்தர்கள் வருகையின்மையால் கோவில்களில் மாதச் சம்பளம் இல்லாமல் பணிபுரியும் ஊழியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விட்ட நிலையில், கோவில் ஊழியர்களால் தங்கள் வாழ்வாதாரத்திற்கு அரசு நிதியுதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. கோவில் ஊழியர்களின் இக்கோரிக்கை முதல்-அமைச்சர் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டது.

கோவில் ஊழியர்களின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கோவில் ஊழியர்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும் வகையில், கோவில்களில் மாதச் சம்பளம் பெறாமல் பணியாற்றும் ஒவ்வொரு கோவில் ஊழியர்களுக்கும் ரூ.4 ஆயிரம் உதவித்தொகை, 10 கிலோ அரிசி மற்றும் 15 வகை மளிகைப் பொருட்கள் வழங்குவதற்கு ஆணையிட்டுள்ளார்.

இந்த உதவித்தொகை, 10 கிலோ அரிசி மற்றும் 15 வகை மளிகைப் பொருட்கள் கோவில் பணியாளர் அல்லாத கோவிலின் மூலம் உரிமம் பெற்றோருக்கும் வழங்கப்படும். ஆக மொத்தம், சுமார் 14 ஆயிரம் கோவில் ஊழியர்கள் மற்றும் கோவில் மூலம் உரிமம் பெற்ற இதர பணியாளர்கள் பயனடைவார்கள்.

இத்திட்டம் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்த தினமான ஜூன் மாதம் 3-ந்தேதியன்று தொடங்கப்படுகிறது. ்

மேற்கண்ட தகவலை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து உள்ளார்.

Next Story