ஆக்சிஜன் 90-க்கு கீழ் இருந்தால் மட்டுமே கொரோனா சிகிச்சை: புதிய வழிகாட்டு நெறிமுறைகள்


ஆக்சிஜன் 90-க்கு கீழ் இருந்தால் மட்டுமே கொரோனா சிகிச்சை: புதிய வழிகாட்டு நெறிமுறைகள்
x
தினத்தந்தி 1 Jun 2021 4:51 AM GMT (Updated: 1 Jun 2021 4:51 AM GMT)

ஆக்சிஜன் 90-க்கு கீழ் இருந்தால் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை தர வேண்டும் என்று தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

சென்னை

தமிழகத்தில் தொடர்ந்து 4-வது நாளாக நேற்று பாதிக்கப்பட்டவர்களை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இது குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,53,264 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 15,766 ஆண்கள், 12,170 பெண்கள் என மொத்தம் 27 ஆயிரத்து 936 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் 12 வயதுக்கு உட்பட்ட 897 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 4,210 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக கோவையில் 3,488 பேரும், சென்னையில் 2,596 பேரும், ஈரோட்டில் 1,742 பேரும், திருப்பூரில் 1,373 பேரும், செங்கல்பட்டில் 1,138 பேரும், சேலத்தில் 1,157 பேரும், திருச்சியில் 1,119 பேரும், நாமக்கலில் 983 பேரும், குறைந்தபட்சமாக பெரம்பலூரில் 224 பேரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்கு சுகாதாரத் துறை சார்பில் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

கொரோனா உறுதி செய்யப்பட்டு ஆக்சிஜன் அளவு 94-க்கு கீழ் இருப்போர் மருத்துவமனையில் அனுமதிக்கக் கூடாது.

அறிகுறிகளுடன் ஆக்சிஜன் அளவு 94-க்கு கீழ் இருப்பவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

ஆக்சிஜன் அளவு 90 முதல் 94-க்குள் இருப்பவர்கள் ஆரம்ப சுகாதார நிலையம், கொரோனா மையங்களில் சிகிச்சை பெறலாம்.

ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 90-க்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே கொரோனா மருத்துவமனைகளில் சிகிச்சை தர வேண்டும்.

தனிமையில் இருப்பவர்கள் உள்பட அனைத்து கொரோனா நோயாளிகளும் குப்புற கவிழ்ந்து படுப்பதை உறுதி செய்ய வேண்டும்.

கொரோனா நோயாளிகளை 3 வகைகளாக பிரித்து சிகிச்சையை தொடர மருத்துவத் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

Next Story