கர்நாடகாவில் இருந்து மதுபானம் கடத்தல் - ஓடும் ரயிலில் 4 பேர் கைது
பெங்களூருவில் இருந்து தமிழ்நாட்டிற்கு மதுபானம் கடத்திய நான்கு பேரை சேலத்தில் ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.
சேலம்,
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் கடந்த மாதம் 10 ஆம் தேதியில் இருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பால், குடிநீர், மருந்து பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ள நிலையில், மதுக்கடைகள் செயல்படவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தமிழகத்திற்கு பிற மாவட்டங்களில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து, கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்ய சிலர் முயற்சி செய்து வருகின்றனர். அந்த வகையில் சேலம் வழியாக செல்லும் ரெயில்களில் மதுபாட்டில்கள், கர்நாடகத்தில் இருந்து கடத்தப்படுவதாக சேலம் ஜங்சன் ரெயில்வே காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து போலீசார் தர்மபுரி ரெயில் நிலையத்தில், மயிலாடுதுறை விரைவு ரெயிலில் ஏறி கண்காணிக்கத் தொடங்கினர். அப்போது 4 பேர் பைகளில் மதுபாட்டில்கள் கடத்தி வருவது தெரிய வந்தது. அவர்களை கைது செய்த ரெயில்வே போலீசார், அவர்களிடம் இருந்து சுமார் 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 200-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேரும் சேலம் மாநகர மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story