மத்திய அரசுடன், இணக்கமாக இருந்து மாநிலத்துக்கு நன்மைகளை கொண்டு வாருங்கள் மு.க.ஸ்டாலினுக்கு, பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் வலியுறுத்தல்


மத்திய அரசுடன், இணக்கமாக இருந்து மாநிலத்துக்கு நன்மைகளை கொண்டு வாருங்கள் மு.க.ஸ்டாலினுக்கு, பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 2 Jun 2021 10:56 PM GMT (Updated: 2 Jun 2021 10:56 PM GMT)

‘‘கருணாநிதி கூறியது போல மத்திய அரசுடன், இணக்கமாக இருந்து மாநிலத்துக்கு பெரும் நன்மைகளை கொண்டு வாருங்கள்’’, என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை, பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

‘மத்திய அரசோடு இணக்கமான போக்கை கடைப்பிடித்தால்தான் மாநிலத்துக்கு பெரும் நன்மைகளை கொண்டுவர முடியும்’, என பகிரங்கமாக சொன்னவர் தி.மு.க. முன்னாள் தலைவர் கருணாநிதி. கருணாநிதியையும், அவரின் போதனைகளையும் இப்போதுள்ள தி.மு.க.வோ, அதன் நிதி அமைச்சரோ சுத்தமாக மறந்தேவிட்டனர் என்பது தெரிகின்றது.

தமிழகத்துக்கு நேற்றைய தினம் அவசரமாக 4 லட்சத்து 20 ஆயிரத்து 570 கோவிஷீல்ட் தடுப்பூசிகள், அத்துடன் 75 ஆயிரம் கோவேக்சின் தடுப்பூசிகளை மத்திய அரசு அனுப்பி உள்ளது. எந்த காரணம் கொண்டும் தடுப்பூசி போடுவதில் தொய்வு ஏற்படக்கூடாது என மத்திய அரசு விரும்புகிறது.

இலவச தடுப்பூசி திட்டத்தில்...

மக்களின் உயிர் காப்பதில் மத்தியில் ஆளும் அரசுக்கு இருக்கும் அக்கறை, மாநில அரசுகளுக்கும் இருக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. ஜூன் மாதத்தில் கிட்டத்தட்ட 12 கோடி தடுப்பு மருந்துகள் (டோஸ்) உபயோகத்துக்கு வரும் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது வந்தால், ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 40 லட்சம் டோஸ் தடுப்பூசி போடலாம். மே மாதம் 8 கோடி டோஸ் பயன்பாட்டுக்கு வந்தது. இதை விட ஜூன் மாதத்தில் 4 கோடி அதிகம் (50 சதவீதம் கூடுதலாக) கிடைக்கும். ஜூலை மாதத்தில் அனேகமாக 20 கோடி வரலாம். ஆகஸ்ட் - டிசம்பர் மாதங்களில் 220 கோடி.

இந்த வேகத்தில் தடுப்பூசி செலுத்தினால் அனைவருக்கும் இந்த ஆண்டுக்குள்ளேயே தடுப்பு மருந்து கிடைக்க வாய்ப்புள்ளது என மத்திய மந்திரி டாக்டர் ஹர்சவர்தனும் உறுதி செய்துள்ளார். அனேகமாக, ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில், இப்போதைய 45 வயதுக்கு மேற்பட்டோர் மட்டுமில்லாமல், 18 வயதுக்கு மேற்பட்டவர்களும் மத்திய அரசின் இலவச திட்டத்தில் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது.

பற்றாக்குறைக்கு காரணம்

இந்தநிலையில் மத்திய மந்திரிகளை சந்தித்து பேசிய தி.மு.க. அமைச்சர் தங்கம் தென்னரசு, டி.ஆர்.பாலு எம்.பி., ஆகியோர், ‘நரேந்திர மோடி அரசானது எங்கள் கோரிக்கைகளை கேட்டு உடனடியாக நிறைவேற்றுகிறது’ என கூறினர்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இருக்காது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்து உள்ளார். ஆனால் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனோ ‘மத்திய அரசின் திட்டமிடல் இல்லாத செயல்பாடே கொரோனா தடுப்பூசி பற்றாக்குறைக்கு காரணம்’, என பொய் பரப்புரையாற்றுகிறார். மேலும், ‘மாநிலங்கள் இல்லாமல் மத்திய அரசு இல்லை’ என்கிறார். மத்திய அரசு என்பது வேண்டியவர், வேண்டாதவர் என அரசியல் செய்வதாக பேசுகிறார்.

அரசியல் செய்யும் நேரமில்லை

தி.மு.க. முன்னாள் தலைவர் கருணாநிதி கூறியது போல் ‘மத்திய அரசோடு இணக்கமான போக்கை கடைபிடித்து மாநிலத்துக்கு பெரும் நன்மைகளை கொண்டுவாருங்கள்’, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே. உங்கள் அமைச்சர்களுக்கு மத்திய-மாநில அரசுகளிடையே நல் உறவு இருப்பின் மட்டுமே மக்கள் நலன் காக்க முடியும் என அறிவுறுத்துங்கள். இது அரசியல் செய்வதற்கான நேரமில்லை என்று எடுத்துரையுங்கள். மக்கள் நலன் ஒன்றையே கவனத்தில் கொள்வோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story