ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில் தமிழக அரசின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை மத்திய அரசு குற்றச்சாட்டு


ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில் தமிழக அரசின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை மத்திய அரசு குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 3 Jun 2021 10:03 PM GMT (Updated: 3 Jun 2021 10:03 PM GMT)

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில் தமிழக அரசின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்று மத்திய அரசு குறைகூறியுள்ளது.

சென்னை,

மத்திய அரசின் பிரதமர் கரீப் கல்யாண் அன்னயோஜனா மற்றும் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்ட செயல்பாடுகள் பற்றி காணொலி காட்சி மூலம் மத்திய உணவு மற்றும் பொது வினியோக திட்டத்துறையின் செயலாளர் சுதன்ஷு பாண்டே நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா பரவல் சூழ்நிலையில், தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பயனடையும் மக்களில், அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்களும், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினரும் பயனடைவதை மாநில அரசுகள் உறுதி செய்வது அவசியமாகிறது.

இதை கருத்தில் கொண்டு நகர மற்றும் ஊரகப்பகுதிகளில் வாழும், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிரிவினரை கண்டறிந்து, அவர்களுக்கு தேசிய உணவு பாதுகாப்பு சட்ட ரேஷன் கார்டுகளை வழங்குவதற்கான சிறப்பு திட்டத்தை மேற்கொள்ளும்படி அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய உணவு மற்றும் பொது வினியோகத்துறை அறிவுறுத்தியுள்ளது.

தெருக்களில் வசிப்பவர்கள், குப்பைகளை சேகரிப்பவர்கள், தெருத்தெருவாக சென்று பொருட்களை விற்பவர்கள், சைக்கிள் ரிக்‌ஷா இழுப்பவர்கள் போன்றவர்களை கண்டறியும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பயனடையும் தனிநபர்களையும், குடும்பங்களையும் கண்டறிவது, ரேஷன் கார்டுகளை வினியோகம் செய்வது ஆகிய பொறுப்புகள் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிடம்தான் உள்ளன.

கூடுதல் உணவு தானியம்

கொரோனா 2-வது அலையில் கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில், ரேஷன் கார்டில் உள்ள உறுப்பினர்களுக்கு ஏற்கனவே வழங்குவதைவிட கூடுதலாக 5 கிலோ உணவு தானியங்களை இலவசமாக வழங்க மாநில அரசுகளுக்கு ஏற்கனவே உத்தரவுகள் வழங்கப்பட்டு உள்ளன.

அதன்படி மாநிலங்களுக்கு 80 லட்சம் டன் உணவு தானியம் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை இதன் மூலம் 80 கோடி மக்கள் பயனடைந்துள்ளனர். இந்த திட்டத்திற்காக மத்திய அரசு 26 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்துள்ளது.

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் 32 மாநிலங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதன மூலம் மாதம் ஒன்றுக்கு இந்தியா முழுவதும் 1.35 கோடி மக்கள் பயனடைகின்றனர்.

பீகார், ராஜஸ்தான், ஆந்திரா, தெலுங்கானா, உத்தரபிரதேசம், கேரளா, கர்நாடகா, அாியானா, மராட்டியம், மத்திய பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஆனால் தமிழகத்தில் இந்த திட்டத்தின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை. எனவே இந்த திட்டத்தை நன்றாக செயல்படுத்த வேண்டும் என்று தமிழக உணவுத்துறை அதிகாரிகளை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம்.

கோதுமை, நெல் கொள்முதல்

மாநிலங்களில் மக்களுக்கான ரேஷன் கார்டுகளை மாநில அரசுதான் வழங்க வேண்டும். மாநில அரசு தரும் தரவுகளின் அடிப்படையில்தான் மத்திய அரசு உணவு தானியங்களை வழங்கி வருகிறது. இந்த தரவுகளின் உண்மைத்தன்மையை சரிபார்க்க நடவடிக்கை எடுகப்படும்.

இந்திய உணவுக்கழகம், நடப்பு ரபி பருவத்தில் இதுவரை 44.43 லட்சம் விவசாயிகளிடம் இருந்து 4.11 கோடி டன் கோதுமையை கொள்முதல் செய்துள்ளது. இதற்காக அவர்களுக்கு ரூ.76 ஆயிரத்து 56 கோடி செலுத்தப்பட்டு உள்ளது. முந்தைய ஆண்டில் இதே காலகட்டத்தில் 3.89 கோடி டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டு இருந்தது.

நடப்பு காலகட்டத்தில் இதுவரை 7.99 கோடி டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. முன்பு இதே காலகட்டத்தில் 7.70 கோடி டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு இருந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story