சொத்து தகராறில் கொடூரம் 2 வயது பெண் குழந்தை குத்திக்கொலை சித்தப்பா கைது


சொத்து தகராறில் கொடூரம் 2 வயது பெண் குழந்தை குத்திக்கொலை சித்தப்பா கைது
x
தினத்தந்தி 3 Jun 2021 11:05 PM GMT (Updated: 3 Jun 2021 11:05 PM GMT)

மதுரையில் சொத்து தகராறில் 2 வயது பெண் குழந்தையை கத்தியால் குத்திக் கொன்ற கொடூர சித்தப்பாவை போலீசார் கைது செய்தனர்.

மதுரை,

மதுரை விளக்குத்தூண் மகால் ரோடு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 38), செல்போன் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி இந்துமதி (34). இந்த தம்பதியினரின் 2 வயது பெண் குழந்தை ஸ்ரீஜா. ஒரு வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. வீட்டின் மாடியில் கிருஷ்ணகுமார் குடும்பமும், கீழே அவருடைய தாயார், தம்பி ராம்குமார் (36) ஆகியோரும் வசித்து வந்தனர். கடந்த சில ஆண்டுகளாக அண்ணன்-தம்பிக்கு இடையே சொத்து பிரச்சினை தொடர்பாக தகராறு இருந்துள்ளது.

அண்ணனுக்கு கத்திக்குத்து

இந்த நிலையில் வீட்டில் உள்ள தண்ணீர் குழாயை ராம்குமார் உடைத்துவிட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து கிருஷ்ணகுமார் கேட்ட போது அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அதில் ஆத்திரம் அடைந்த ராம்குமார் கத்தியை எடுத்து அண்ணனை நோக்கி பாய்ந்தார். இதனால் கிருஷணகுமார் தனது வீட்டிற்குள் பயந்து ஓடினார். ஆனாலும் விரட்டி சென்று கிருஷ்ணகுமாரின் கண் மற்றும் கைகளில் குத்தியதாக தெரிகிறது. அப்போது கிருஷ்ணகுமாரின் மனைவி இந்துமதி பயந்து சத்தம் போட அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.

2 வயது குழந்தை கொலை

ஆனாலும் ஆத்திரம் அடங்காத ராம்குமார் அங்கு படுக்கையில் படுத்திருந்த 2 வயது குழந்தை ஸ்ரீஜாவின் நெஞ்சு, கழுத்தில் குத்தி விட்டு தப்பி விட்டார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய குழந்தை மற்றும் காயம் அடைந்த கணவரை பார்த்து இந்துமதி கதறினார். பின்னர் இருவரையும் அவர் மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்த போது ஏற்கனவே குழந்தை ஸ்ரீஜா இறந்துவிட்டது தெரியவந்தது. காயம் அடைந்த கிருஷ்ணகுமாருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். குழந்தையின் உடலை பார்த்து இந்துமதி கதறியது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

சம்பவம் குறித்து விளக்குத்தூண் போலீசார் விசாரணை நடத்தி ராம்குமார் மீது வழக்குப்பதிவு செய்து, நேற்று காலை மகால் பகுதியில் மறைந்திருந்த அவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.

Next Story