கொரோனா 2-ம் கட்ட நிவாரணம் ரூ.2 ஆயிரம் 14 வகை மளிகை பொருட்கள் வழங்கும் திட்டம் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்


கொரோனா 2-ம் கட்ட நிவாரணம் ரூ.2 ஆயிரம் 14 வகை மளிகை பொருட்கள் வழங்கும் திட்டம் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 3 Jun 2021 11:14 PM GMT (Updated: 3 Jun 2021 11:14 PM GMT)

கொரோனா 2-ம் கட்ட நிவாரணமாக ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் வழங்கல் திட்டத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னை,

தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் மே 7-ந்தேதி பொறுப்பேற்றதும் தேர்தலில் மக்களுக்கு வாக்களித்தப்படி கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டத்துக்கு முதல் கையெழுத்திட்டார். இதில் முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் உடனடியாக வழங்கவும் உத்தரவிட்டார். அதன்படி கடந்த மாதம் ரே‌ஷன் கடைகளில் அரிசி அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு ரூ.2 ஆயிரம் ரொக்கமாக வழங்கப்பட்டது. தற்போது, 2-வது கட்டமாக கொரோனா நிவாரண நிதி ரூ.2 ஆயிரம், 14 வகையான மளிகை பொருட்கள் வழங்கும் திட்டத்தை மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை தேர்தல்-2021 தேர்தல் அறிக்கையில், கொரோனா தொற்றால் செயல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் துன்பங்களைப் போக்குவதற்கு, அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள குடும்பங்கள் அனைத்திற்கும் ஆறுதல் அளிக்கும் வகையில் கருணாநிதி பிறந்தநாள் முதல் ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்திருந்தார்.

தொடங்கி வைத்தார்

அதனடிப்படையில் கொரோனா நோய் தொற்றின் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை குறைக்கும் வகையிலும், பெருந்தொற்று நேரத்தில் பொதுமக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையிலும், ரூ.4,196.38 கோடி செலவில், மே மாதத்தில் 2,09,81,900 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணத் தொகைக்கான முதல் தவணை ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை 10.5.2021 அன்று தலைமைச் செயலகத்தில், முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்.

அதன் தொடர்ச்சியாக, தற்போது, ஜூன் மாதத்தில் ரூ.4,196.38 கோடி செலவில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணத் தொகைக்கான இரண்டாவது தவணை ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள பொது மக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில், மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் ஜூன் மாதம் முதல் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 28.5.2021 அன்று அறிவித்தார்.

14 வகை மளிகை பொருட்கள்

அந்த அறிவிப்பிற்கிணங்க, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.844.51 கோடி செலவில் 14 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பினை வழங்கும் திட்டத்தையும் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி, தலைமைச்செயலாளர் இறையன்பு, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச்செயலாளர் முகமது நசிமுத்தின், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குனர் டாக்டர் ஆர். ஆனந்தகுமார், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் இல.சுப்பிரமணியன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story