ஆசிரியர்கள் 20-ந்தேதிக்குள் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் - கல்வித்துறை உத்தரவு
அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், அலுவலர்கள், அலுவலர் அல்லாத பணியாளர்கள் என எல்லோருமே கொரோனா தடுப்பூசியை வருகிற 20-ந்தேதிக்குள் போட்டிருக்க வேண்டும்.
சென்னை,
கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஓராண்டுக்கு மேலாக மூடப்பட்டு இருக்கின்றன. இடையில் கடந்த ஜனவரி மாதம் 11, 12-ம்வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் நடத்தப்பட்டன. ஆனால் மீண்டும் தொற்று அதிகரித்ததன் காரணமாக அவர்களுக்கும் விடுமுறை விடப்பட்டு பள்ளிகள் மூடப்பட்டன. பள்ளிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்பது தொடர்ந்து கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.
இந்த நிலையில் கல்வித்துறை சார்பில் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
அதில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், அலுவலர்கள், அலுவலர் அல்லாத பணியாளர்கள் என எல்லோருமே கொரோனா தடுப்பூசியை வருகிற 20-ந்தேதிக்குள் போட்டிருக்க வேண்டும். கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் அதற்கான காரணத்தை உரிய ஆதாரங்களுடன் தெரிவிக்க வேண்டும். இந்த நடவடிக்கையில் கல்வித்துறை அதிகாரிகள் மெத்தனம் காட்டாமல் உடனடியாக செய்து முடிக்க வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story