ஊரடங்கு நீட்டிப்பு: கோவை, திருப்பூர் உள்பட 11 மாவட்டங்களில் என்னென்ன தளர்வுகள்?


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 6 Jun 2021 2:21 AM GMT (Updated: 6 Jun 2021 2:21 AM GMT)

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள கோவை, திருப்பூர் உள்பட 11 மாவட்டங்களில் தளர்வுகள் என்னென்ன என்பது குறித்த தமிழக அரசு உத்தரவு வெளியிட்டுள்ளது.

சென்னை, 

தமிழகத்தில் ஊரடங்கை மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் நோய்த்தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் என்னென்ன தளர்வுகள் என்பது குறித்து தமிழக அரசு வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் தற்போது கொரோனா நோய்த்தொற்று பரவலாக பல மாவட்டங்களில் கட்டுக்குள் வந்துள்ளபோதிலும் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் மட்டும் நோய்த்தொற்று பரவல் தொடர்ந்து அதிகமாகவே இருந்து வருகிறது. 

எனவே இந்த மாவட்டங்களில் நோய்த்தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டுவரும் வகையிலும், அதே சமயம் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்துடனும் தற்போது ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன் 11 மாவட்டங்களில் கீழ்க்கண்ட அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் 7-ந்தேதி முதல் அனுமதி அளிக்கப்படுகிறது. அதன் விவரம் வருமாறு:-

* தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* மீன் சந்தைகள் மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். மீன் சந்தைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் பொருட்டு, ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் திறந்த வெளியில் இந்த சந்தைகளை அமைப்பதற்கான மாற்று ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகங்கள் உடனடியாக செய்ய வேண்டும்.

* இறைச்சிக்கூடங்கள் மொத்த விற்பனைக்கு மட்டும் அனுமதிக்கப்படும்.

* அனைத்து அரசு அலுவலகங்களும், 30 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

* சார்பதிவாளர் அலுவலகங்கள் ஒரு நாளைக்கு 50 சதவீத டோக்கன்கள் மட்டும் வழங்கப்பட்டு, பத்திரப்பதிவுகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.

* தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50 சதவீத பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story