ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வினியோகம் தொடங்கியது


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 6 Jun 2021 3:18 AM GMT (Updated: 6 Jun 2021 3:18 AM GMT)

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர்கள் வினியோகம் நேற்று தொடங்கியது.

தூத்துக்குடி, 

நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து மருத்துவ ஆக்சிஜன் தேவையும் அதிகரித்தது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது.

இதனை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தின் முதலாவது பிரிவில் உற்பத்தி தொடங்கப்பட்டது. நேற்று வரை 493.07 டன் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. இதில் 476.26 டன் திரவ ஆக்சிஜன் டேங்கர் லாரிகள் மூலம் தமிழகம் முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

மேலும் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் திரவ ஆக்சிஜன் உற்பத்திக்கான கட்டமைப்பு வசதி மட்டுமே இருந்தது. இதனால் இதுநாள் வரை திரவ ஆக்சிஜன் மட்டும் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகம் முழுவதும் அனுப்பப்பட்டு வருகிறது.

இந்த ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் வாயு நிலையிலான ஆக்சிஜன் அதிகமாக உற்பத்தியாகிறது. ஆனால் அதனை சிலிண்டர்களில் அடைத்து வினியோகம் செய்வதற்கான கட்டமைப்பு வசதிகள் சமீபத்தில் ஏற்படுத்தப்பட்டன.

இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வாயு நிலையிலான மருத்துவ பயன்பாட்டு ஆக்சிஜன் சிலிண்டர்கள் வினியோகம் நேற்று தொடங்கியது.

நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மொத்தம் உற்பத்தியான 260 டன் வாயு நிலையிலான ஆக்சிஜனில் 380 கிலோ எடையுள்ள வாயு நிலையிலான ஆக்சிஜன் மட்டும் 38 சிலிண்டர்களில் நிரப்பப்பட்டு தூத்துக்குடியில் உள்ள தனியார் ஆக்சிஜன் வினியோகிக்கும் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து இங்கு வரும் காலி சிலிண்டர்களுக்கு ஏற்ப வாயு நிலையிலான ஆக்சிஜன் நிரப்பப்பட்டு தேவையான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என அரசு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Next Story