தமிழகத்தில் 8 மாவட்டகளில் கன மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 6 Jun 2021 8:16 AM GMT (Updated: 6 Jun 2021 8:16 AM GMT)

தமிழகத்தில் 8 மாவட்டகளில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, 

வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் 8 மாவட்டகளில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை திருவண்ணாமலை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. வடதமிழகத்தின் பிற பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழையும், தென்தமிழகத்தின் சில பகுதிகளில் லேசான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. 

நாளை (7 ஆம் தேதி) மற்றும் நாளை மறுநாள் (8 ஆம் தேதி) மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புகள் உள்ளது. 

சென்னையை பொறுத்த வரையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும்.

மன்னார்வளைகுடா, மத்திய வங்கக்கடல், தெற்கு வங்கக்கடல், கேரளா கடலோரப்பகுதி, இலட்சத்தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் அநேக மாவட்டங்களில் முன்னேறி உள்ளது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story