கருப்பு பூஞ்சை நோய்க்கு போதிய மருந்துகளை மத்திய அரசு வழங்கவில்லை கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு


கருப்பு பூஞ்சை நோய்க்கு போதிய மருந்துகளை மத்திய அரசு வழங்கவில்லை கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு
x

கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்க தேவையான மருந்துகளை மத்திய அரசு வழங்கவில்லை என்று கனிமொழி எம்.பி. குற்றம்சாட்டினார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள கொரோனா சிகிச்சை வார்டில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து ரூ.50 லட்சம் செலவில் லிப்ட் வசதி அமைக்கும் பணிகளை கனிமொழி எம்.பி. நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மருந்துகள் இல்லை

கருப்பு பூஞ்சை தொற்று அதிகம் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. நாட்டில் பல மாநிலங்களில் போதுமான மருந்துகள் இல்லாததால் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ள மக்கள் மிகவும் சிரமத்தில் உள்ளனர். ஆனால் மத்திய அரசு போதிய அளவிலான மருந்துகளை மாநிலங்களுக்கு அனுப்பவில்லை என்பது தான் உண்மை.

இந்த மருந்தை வெளிநாடுகளில் இருந்து வாங்க வேண்டிய சூழ்நிலை இருப்பதாக சொல்கிறார்கள். மாவட்டங்களுக்கு போதுமான மருந்துகள் வந்து சேரவில்லை. எனவே மத்திய அரசு உடனடியாக இந்த மருந்தை உள்நாட்டில் தயாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது வெளிநாடுகளில் இருந்து வாங்கி மாநிலங்களுக்கு வழங்க வேண்டும்.

நாடு முழுவதும் உள்ள பல ஆஸ்பத்திரிகள் கருப்பு பூஞ்சை நோய் தொற்றுக்கான மருந்துகள் இல்லை. இருப்பினும் அரசு ஆஸ்பத்திரிகளில் மாற்று மருந்துகள் மூலம் இந்த நோயை குணப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர் கீதாஜீவன்

இந்த ஆய்வின்போது, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ் மற்றும் டாக்டர்கள், அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Next Story