சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு வண்டலூர் உயிரியல் பூங்காவில் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு


சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு வண்டலூர் உயிரியல் பூங்காவில் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 6 Jun 2021 11:11 PM GMT (Updated: 6 Jun 2021 11:11 PM GMT)

கொரோனாவால் சிங்கங்கள் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து வண்டலூர் உயிரியல் பூங்காவில் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.

சென்னை,

சீனாவின் உகான் நகரத்தில் தோன்றி உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று, விலங்குகளையும் விட்டு வைக்கவில்லை.

ஐதராபாத், ஜெய்ப்பூர் மற்றும் உத்தரபிரதேச மாநிலம் எட்டவா ஆகிய இடங்களில் உள்ள சிங்கங்கள் கொரோனா தொற்றுக்கு ஆளானதாக தகவல்கள் வெளிவந்தன.

அதைத் தொடர்ந்து முன்எச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மாதம் 20-ந் தேதி முதல் தமிழ்நாட்டில் உள்ள உயிரியல் பூங்காக்கள், பார்வையாளர்கள் வருகையைத் தவிர்க்க மூடப்பட்டன.

ஆனாலும், சென்னையை அடுத்த வண்டலூரில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள ஆசிய இன சிங்கங்களையும் கொரோனா வைரஸ் தொற்று பாதித்திருப்பது கடந்த 3-ந் தேதி தெரிய வந்தது. அங்கு நீலா என்ற 9 வயது பெண் சிங்கம், கொரோனா தொற்றால் உயிரிழந்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அத்துடன் மேலும் சில சிங்கங்களுக்கு கொரோனா தொற்று பாதிப்புக்கான அறிகுறிகள் தென்பட்டன.

மாதிரிகள் பரிசோதனை

உடனடியாக 11 சிங்கங்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ஐ.சி.ஏ.ஆர். உயர்பாதுகாப்பு விலங்கு நோய்கள் தேசிய நிறுவனத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டன.

இதேபோன்று புலிகள் மற்றும் பெரிய பாலூட்டிகளின் மாதிரிகள் சேகரிக்கப்படடு, அவையும் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன.

அத்துடன் ஆசிய சிங்கங்கள் அனைத்தும் தனிமைப்படுத்தப்பட்டன. அவற்றுக்கு தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் உதவியுடன் ஆன்டிபயாடிக் (நுண்ணுயிரி எதிர்ப்பு) மற்றும் பிற நோய்த்தடுப்பு மருந்துகள் தரப்பட்டு வருகின்றன.

முதல்-அமைச்சர் திடீர் ஆய்வு

இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திடீரென வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு சென்றார். அவரை உயிரியல் பூங்கா அதிகாரிகள் வரவேற்றனர்.

தொடர்ந்து மு.க.ஸ்டாலின், அவர்களுடன் உயிரியல் பூங்காவில் ஆய்வு மேற்கொண்டார். அவர் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பேட்டரி காரில் பயணம் செய்தபடி விலங்குகளை அவற்றின் வசிப்பிடங்களுக்கு அருகில் சென்று பார்வையிட்டு, விலங்குகளின் உடல்நலம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

அவரிடம், பூங்காவின் இயக்குனர் தேபசிஸ் ஜனா, எல்லா விலங்குகளையும் கண்காணிப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கினார். மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைக்கழகத்தின் எல்லா வழிகாட்டும் நெறிமுறைகளும், சிகிச்சை முறைகளும் பின்பற்றப்படுவதாக தெரிவித்தார்.

டாக்டர் ஸ்ரீதர் தலைமையிலான டாக்டர் குழுவினர் மு.க.ஸ்டாலினிடம், பாதிக்கப்பட்டுள்ள சிங்கங்களுக்கு அளித்து வருகிற சிகிச்சை பற்றியும், பூங்காவில் உள்ள பிற விலங்குகளை கண்காணித்து வருவது குறித்தும் எடுத்து கூறினர்.

தொற்று நோய்க்கான காரணங்களை அடையாளம் காண எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் விளக்கினர்.

வைரஸ் திரிபு கண்டறிய பரிசோதனை

3 சிங்கங்கள் மற்றும் 4 புலிகளிடம் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் உத்தரபிரதேச மாநிலம், பரேய்லியில் உள்ள இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்துக்கு விரிவான பகுப்பாய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினார்கள்.

அத்துடன் சிங்கங்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள், என்ன வகையான வைரஸ் திரிபு அவற்றுக்கு பாதித்துள்ளது என்பதை கண்டறிவதற்காக ஐதராபாத்தில் உள்ள செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்துக்கும் அனுப்பிவைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தடுப்பூசி போட அறிவுரை

வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ள சிங்கங்களுக்கு நிலையான வழிகாட்டும் நெறிமுறைகளின்படி சிறப்பான சிகிச்சை அளிக்கும்படி சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.

அனைத்து விலங்குகளின் பராமரிப்பாளர்களுக்கு முறையாக கொரோனா தடுப்பூசி போடப்படுகிறதா என்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

இந்த நிகழ்வின்போது, ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலாளர் சுப்ரியாசாகு, செல்வம் எம்.பி. மற்றும் வனத்துறை அதிகாரிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Next Story