கைக்குழந்தையுடன் பல கிலோ மீட்டர் தூரம் நடந்து வேலூர் வந்த தம்பதி


கைக்குழந்தையுடன் பல கிலோ மீட்டர் தூரம் நடந்து வேலூர் வந்த தம்பதி
x
தினத்தந்தி 7 Jun 2021 6:55 PM GMT (Updated: 7 Jun 2021 6:55 PM GMT)

ஊரடங்கால் வாழ்வாதரத்தை இழந்த தம்பதி சென்னைக்கு செல்வதற்காக 5 நாட்கள் கைக்குழந்தையுடன் கால்கடுக்க நடந்தே வந்தனர். வேலூர் வந்த அவர்களுக்கு அரசு டாக்டர் உதவி செய்து தனது காரில் சென்னைக்கு அனுப்பி வைத்தார்.

வேலூர்

ஊரடங்கால் வாழ்வாதரத்தை இழந்த தம்பதி சென்னைக்கு செல்வதற்காக 5 நாட்கள் கைக்குழந்தையுடன் கால்கடுக்க நடந்தே வந்தனர். வேலூர் வந்த அவர்களுக்கு அரசு டாக்டர் உதவி செய்து தனது காரில் சென்னைக்கு அனுப்பி வைத்தார்.

தொழிலாளி

கொரோனா ஊரடங்கு காரணமாக பஸ் போக்குவரத்து இல்லாததால் வெளியூரில் வேலைபார்க்கும் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து உணவுக்கும் வழியில்லாமல் சொந்த ஊருக்கும் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். 

இந்த நிலையில் கோவையை சேர்ந்த தொழிலாளி தனது மனைவி மற்றும் கைக்குழந்தையுடன் சென்னைக்கு செல்வதற்காக 5 நாட்கள் பல கிலோ மீட்டர் தூரம் நடந்ேத வந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதன்விவரம் விவரம் வருமாறு:-

கோவை மதுக்கரை பகுதியை சேர்ந்தவர் நவீன் (வயது 25). இவரது மனைவி ரம்யா. இவர்களுக்கு 1 வயதில் பெண் குழந்தை உள்ளது. குடும்ப வறுமை காரணமாக சென்னையில் செங்கல் தயாரிக்கும் வேலைக்கு செல்ல நவீன் முடிவு செய்தார். பஸ் போக்குவரத்து வசதி இல்லாததால் அவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் கோவையில் இருந்து புறப்பட்டு கடந்த 5 நாட்களாக நடந்து வேலூர் வந்துள்ளார். 
வரும் வழியில் அவ்வப்போது இளைப்பாறிய பின்னர் பயணத்தை தொடர்ந்து வந்தனர். இவர்கள் வேலூர் வழியாக நடந்து செல்வதை வேலூர் அரசு கால்நடை அரசு மருத்துவமனை மருத்துவர் ரவிசங்கர் பார்த்தார்.

தனது கார் மூலம்...

அவர் அந்த தம்பதியிடம் விசாரித்தார். அப்போது நவீன் கூறுகையில், ‘‘எனது பெற்றோர் வயதானவர்கள். தாய்க்கு உடல் நிலை சரியில்லாததால் ரூ.30 ஆயிரம் கடன் வாங்கி மருத்துவம் பார்த்தோம். நாங்கள் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். கொரோனாவால் வேலை இல்லாததால் 2 மாத வாடகை கட்ட முடியவில்லை. உணவுக்கும் வழியில்லை. கடன் தொல்லை வேறு. 

இந்த சுழலில் தான் சென்னையில் வேலையுடன் தங்க இடம் கொடுப்பதாக சொன்னார்கள். அதனால் தான் துணிந்து நடந்தே சென்னைக்கு புறப்பட்டோம். வழியில் யாராவது சாப்பிட உணவு கொடுப்பார்கள் அதை வாங்கி பசியாறிவிட்டு வேலூர் வரை வந்தோம்’’ என்றார். 

இதைக்கேட்டதும் அவர்களின் நிலை குறித்து அறிந்த டாக்டர், அந்த தம்பதிக்கு செலவுக்கு பணம் கொடுத்து தனது காரில் சொந்த செலவில் அவர்களை சென்னைக்கு அனுப்பி வைத்தார்.
============


Next Story