டைரக்டர் சொர்ணம் மரணம் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி


டைரக்டர் சொர்ணம் மரணம் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
x
தினத்தந்தி 8 Jun 2021 7:53 PM GMT (Updated: 8 Jun 2021 7:53 PM GMT)

டைரக்டர் சொர்ணம் மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

சென்னை,

பிரபல திரைப்பட இயக்குனர் சொர்ணம். இவர் சென்னை கொட்டிவாக்கத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். வயது மூப்பு காரணமாக சொர்ணத்துக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 88. மரணம் அடைந்த சொர்ணம் மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதி கதை எழுதிய ஒரே ரத்தம் மற்றும் சிவகுமார், கமல்ஹாசன் நடித்த தங்கத்திலே வைரம், முத்துராமன் நடித்த சீர்வரிசை, ஜெய்சங்கர் நடித்த ஆசை மனைவி, நீ ஒரு மகராணி உள்ளிட்ட படங்களை டைரக்டு செய்துள்ளார்.

எம்.ஜி.ஆர். நடித்த தாயின் மடியில், நம்நாடு, கலங்கரை விளக்கம், குடியிருந்த கோயில், ஒளிவிளக்கு, என் அண்ணன், குமரி கோட்டம், இதயவீணை, ராமன் தேடிய சீதை. பட்டிக்காட்டு பொன்னையா உள்ளிட்ட 11 படங்களுக்கு வசனம் எழுதி உள்ளார். மரணம் அடைந்த சொர்ணத்துக்கு அருண்மொழி என்ற மனைவியும், முத்தரசி, கலையரசி என்ற மகள்களும் உள்ளனர்.

மு.க.ஸ்டாலின் அஞ்சலி

சொர்ணம் உடலுக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். சொர்ணத்தின் குடும்பத்தினருக்கு மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார். அப்போது அவருடைய மனைவி துர்கா ஸ்டாலின் உடன் இருந்தார்.

திரைப்பட இயக்குனர் சொர்ணம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

அதிர்ச்சி

திரைப்பட இயக்குனரும், திரைக்கதை ஆசிரியருமான சொர்ணத்தின், திடீர் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவரது மறைவுக்கு தி.மு.க.வின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். கருணாநிதியின் முதல் பிள்ளையான முரசொலி உருவாக்கிய ஆற்றல்மிகு எழுத்தாளர்களில் ஒருவரான இவர் ஆரம்ப கால துணையாசிரியராக இருந்து “பிறை வானம்” என்ற தொடரை முரசொலியில் எழுதியவர். மாணவப் பருவத்திலேயே கருணாநிதியால் கூர்மைப்படுத்தப்பட்ட சொர்ணம், சமுதாய சீர்திருத்த கருத்துக்கள் அடங்கிய “விடைகொடு தாயே” என்ற புரட்சிகர நாடகத்தின் மூலம் தி.மு.க.வின் கொள்கைகளை பட்டிதொட்டிக்கெல்லாம் கொண்டு சென்றவர். கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடம் எழுச்சியை ஏற்படுத்திய இந்த நாடகம் தி.மு.க. மாநாடுகளில் நடத்தப்பட்டது.

இரங்கல்

எம்.ஜி.ஆர். நடித்த படங்களில் 17 படங்களுக்கு உரையாடல் தீட்டிய அவர், கருணாநிதி எழுதிய “ஒரே ரத்தம்” எனும் திரைப்படம் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர். நான் நடத்திய “இளைய சூரியன்” வார ஏட்டின் பொறுப்பாசிரியராக பணியாற்றிய இவர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் செயலாளர், தமிழ்நாடு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்லூரி தலைவர், தமிழ்நாடு திரைப்படப் பிரிவு தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் திறம்படப் பணியாற்றி- கலை இலக்கிய பணிக்கு பெருமை சேர்த்தவர்.

முரசொலியில் ஞாயிறு தோறும் வெளிவந்த “புதையல்” இதழின் முழுப் பொறுப்பையும் ஏற்று, கருணாநிதியின் எழுத்தோவியங்களை என்றும் பாதுகாக்க வேண்டிய கருத்துக் கருவூலமாக்கியவர். கலைஞர் விருது வழங்கி கவுரவப்படுத்தப்பட்டவர். எழுத்தாளர், இயக்குனர், வசனகர்த்தா, பத்திரிகையாளர் என்று பன்முகத் திறமையாளராக திகழ்ந்த சொர்ணத்தை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story