கன்னியாகுமரி, புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 9 Jun 2021 10:08 AM GMT (Updated: 9 Jun 2021 10:08 AM GMT)

தமிழக கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, 

தமிழக கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், வரும் 11ம் தேதி வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாகும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்ட அறிக்கையில், “வெப்பச்சலனம் காரணமாக. ஜூன் 09, 10ஆம் தேதிகளில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை (ஜூன் 11) தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

ஜூன் 11, 12ஆம் தேதிகளில் கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும். 

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 11, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி 10 செ.மீ., புதுக்கோட்டை நாகுடியில் 6 செ.மீ, மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் 5 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை வங்கக்கடல் பகுதிகள் வடக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 11ம் தேதி ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாவதன் காரணமாக ஜூன் 09ஆம் தேதி மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 

அரபிக்கடல் பகுதிகள் ஜூன் 11 முதல் 13ஆம் தேதி வரை கேரளா, கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும்.

ஜூன் 09 முதல் 13ஆம் தேதி வரை தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 60 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story