நாளை திருச்சிக்கு பயணம்: கல்லணையில் தூர்வாரும் பணிகளை மு.க.ஸ்டாலின் பார்வையிடுகிறார்


நாளை திருச்சிக்கு பயணம்: கல்லணையில் தூர்வாரும் பணிகளை மு.க.ஸ்டாலின் பார்வையிடுகிறார்
x
தினத்தந்தி 9 Jun 2021 8:58 PM GMT (Updated: 9 Jun 2021 8:58 PM GMT)

நாளை திருச்சிக்கு பயணம் மேற்கொள்ளும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கல்லணையில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்கிறார்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீப நாட்களாக மாவட்டங்களுக்கு சென்று கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்து வருகிறார். அந்த வகையில் கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அவர் சென்று ஆய்வுப்பணி மேற்கொண்டார்.

இந்த நிலையில் காவிரி நீர் செல்லும் பாதைகளில் தூர்வாரும் பணியை மேற்கொள்ளும்படி ஏற்கனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு இருந்தார். டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாசனத்திற்கு வசதியை ஏற்படுத்தும் வகையில் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ளும்படி ஆணையிடப்பட்டது. இதற்காக ரூ.65 கோடி ஒதுக்கப்பட்டது.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்

மேலும், டெல்டா பகுதியின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை கண்காணிப்பு அதிகாரிகளாக நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் மேற்பார்வையில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்யவுள்ளார்.

கல்லணை பணிகள்

இதற்காக சென்னையில் இருந்து 11-ந் தேதி (நாளை) காலை சிறப்பு விமானம் மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சிக்கு செல்கிறார். திருச்சி விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் கல்லணை கால்வாய்க்கு செல்கிறார்.

கல்லணை கால்வாயில் கடைமடை வரை தண்ணீர் சென்றடைய வசதியாக ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி நிதி உதவியுடன் நவீனப்படுத்துதல், சீரமைத்தல் ஆகிய பணிகள் நடைப்பெற்று வருகின்றன.

இந்த பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை 10.15 மணி முதல் 10.30 மணி வரை ஆய்வு செய்வதுடன், அங்கே அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

அதைத் தொடர்ந்து காவிரி ஆறு செல்லும் பாதையில் நடக்கும் தூர்வாரும் பணிகளையும் அவர் ஆய்வு செய்கிறார். காலை 10.30 மணி தொடங்கி பிற்பகல் 12.30 மணி வரை இந்த ஆய்வுப்பணியை அவர் மேற்கொள்வார்.

மேட்டூர் தண்ணீர் திறப்பு

பின்னர் 12-ந் தேதி சேலத்தில் இருந்து காலை 10 மணிக்கு மேட்டூர் அணைக்கு செல்கிறார். அங்கு 10.30 மணி வரை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். அதைத் தொடர்ந்து 10.30 மணியில் இருந்து 10.45 மணிக்குள் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுகிறார்.

இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சர் துரைமுருகன், எ.வ.வேலு மற்றும் நீர்வளம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கவுள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் அவர் சேலம், திருவாரூர் மாவட்டங்களுக்கு செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Next Story