தமிழகத்தில் 17,321 பேருக்கு கொரோனா: 13 நாளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சம் குறைந்தது


தமிழகத்தில் 17,321 பேருக்கு கொரோனா: 13 நாளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சம் குறைந்தது
x
தினத்தந்தி 9 Jun 2021 10:08 PM GMT (Updated: 9 Jun 2021 10:08 PM GMT)

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 17,321 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்த 13 நாட்களில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் மேல் குறைந்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கடந்த மாதம் 27-ந் தேதி சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 13 ஆயிரத்து 48 ஆக இருந்தது. இந்த நிலையில் 13 நாட்களில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் மேல் குறைந்துள்ளது.

அந்த வகையில் நேற்று 2 லட்சத்து 4 ஆயிரத்து 258 பேர் சிகிச்சையில் இருந்தனர். இது குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று புதிதாக 1 லட்சத்து 70 ஆயிரத்து 332 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 9,522 ஆண்கள், 7,799 பெண்கள் என மொத்தம் 17 ஆயிரத்து 321 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 2 பேருக்கும், 12 வயதுக்கு உட்பட்ட 671 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 2,747 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக கோவையில் 2,319 பேரும், சென்னையில் 1,345 பேரும், ஈரோட்டில் 1,405 பேரும், திருப்பூரில் 913 பேரும், சேலத்தில் 957 பேரும், குறைந்தபட்சமாக சிவகங்கையில் 117 பேரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

405 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இதுவரை 2 கோடியே 85 லட்சத்து 19 ஆயிரத்து 161 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 13 லட்சத்து 44 ஆயிரத்து 157 ஆண்களும், 9 லட்சத்து 47 ஆயிரத்து 830 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 38 பேரும் உள்பட 22 லட்சத்து 92 ஆயிரத்து 25 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதில் 12 வயதுக்கு உட்பட்ட 82 ஆயிரத்து 636 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 3 லட்சத்து 28 ஆயிரத்து 860 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர். கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 236 பேரும், தனியார் மருத்துவமனையில் 169 பேரும் என 405 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் 52 பேர் பலி

அந்த வகையில் அதிகபட்சமாக கோவையில் 62 பேரும், சென்னையில் 52 பேரும், செங்கல்பட்டில் 29 பேரும், சேலத்தில் 23 பேரும், திருப்பூர், பெரம்பலூர், மதுரையில் தலா 15 பேரும், கன்னியாகுமரியில் 14 பேரும், கடலூரில் 13 பேரும், திருச்சி, திருவள்ளூர், காஞ்சீபுரத்தில் தலா 12 பேரும், வேலூர், நாமக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரியில் தலா 10 பேரும் உயிரிழந்துள்ளனர்.

தென்காசியில் 9 பேரும், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், ராணிப்பேட்டையில் தலா 7 பேரும், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கரூரில் தலா 6 பேரும், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், தருமபுரியில் தலா 5 பேரும், விருதுநகர், விழுப்புரத்தில் தலா 4 பேரும், நெல்லை, தூத்துக்குடி, அரியலூரில் தலா 3 பேரும், ராமநாதபுரத்தில் 2 பேரும், நீலகிரியில் ஒருவரும் என 34 மாவட்டங்களில் உயிரிழந்துள்ளனர்.

31,253 பேர் ‘டிஸ்சார்ஜ்’

உயிரிழந்தவர்களில் 94 பேர் இணை நோய் அல்லாதவர்கள் ஆவர். அந்தவகையில் தமிழகத்தில் இதுவரை 28 ஆயிரத்து 170 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து 31,253 பேர் நேற்று ‘டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர்.

இதுவரையில் 20 லட்சத்து 59 ஆயிரத்து 597 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 2 லட்சத்து 4 ஆயிரத்து 258 பேர் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story