ஊரடங்கில் தளர்வு மட்டுமே அளிக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் தேவையின்றி வெளியே சுற்றுவதை தடுக்க வேண்டும் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு


ஊரடங்கில் தளர்வு மட்டுமே அளிக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் தேவையின்றி வெளியே சுற்றுவதை தடுக்க வேண்டும் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 9 Jun 2021 10:47 PM GMT (Updated: 9 Jun 2021 10:47 PM GMT)

ஊரடங்கில் தளர்வு மட்டுமே அளிக்கப்பட்டுள்ள நிலையில், இயல்புநிலை திரும்பியது போன்று கருதிக்கொண்டு பொதுமக்கள் தேவையின்றி வெளியே சுற்றுவதை தடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் சிவா என்பவர் தாக்கல் செய்த மனுவில், கொரோனா ஊரடங்கு காலத்தில் தெருவில் சுற்றித்திரியும் நாய் போன்ற பல்வேறு விலங்குகள் உணவு, குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுவதாகவும், அதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' என்றும் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, இதுதொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு இருந்தது.

தன்னார்வலர்கள் மூலம் வினியோகம்

இந்தநிலையில் நேற்று அந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், 500 தன்னார்வலர்கள் மூலம் தெரு நாய்களுக்கு 2,500 கிலோ உணவுப்பொருட்கள் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வாழ்வாதாரத்துக்காக வளர்க்கப்படும் 104 குதிரைகளுக்கு 3,536 கிலோ கோதுமை வழங்கப்பட்டுள்ளது.

நிதி ஒதுக்கீடு

விலங்குகளுக்கு உணவு வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட வங்கிக் கணக்கில் ரூ.19 லட்சத்து 29 ஆயிரம் இருப்பு இருந்தது. அதன்மூலம் சென்னை மாநகராட்சிக்கு ரூ.7 லட்சத்து 91 ஆயிரமும், பிற 14 மாநகராட்சிகளுக்கு ரூ.11 லட்சத்து 84 ஆயிரமும் நிதி வழங்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது.

அதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று கூறி விசாரணையை தள்ளிவைத்தனர்.

பொதுமக்கள் நடமாட்டம் அதிகம்

இந்த வழக்கு விசாரணையின்போது, ஊரடங்கில் தளர்வுகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ள நிலையில், வெளியில் பொதுமக்கள் அதிகமாக நடமாடுவதை பார்க்கும்போது ஊரடங்கு முழுமையாக நீக்கப்பட்டது போன்று தெரிகிறதே என்று தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரத்திடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அட்வகேட் ஜெனரல், கொரோனா முதல் அலையின்போது அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் போலீசார் மிகவும் கடுமையாக நடந்துகொண்டதால் பல இடங்களில் பிரச்சினை ஏற்பட்டது. ஊரடங்கில் தேவையின்றி வெளியே சுற்ற வேண்டாம் என்ற அரசின் உத்தரவை மக்கள் கடைபிடிப்பார்கள் எனக்கருதி, ஊரடங்கின்போது பல்வேறு காரணங்களுக்காக வெளியே வரும் மக்களிடம் கடுமை காட்ட வேண்டாம் தற்போது போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதை பொதுமக்கள் சாதகமாக எடுத்துக்கொண்டு இருக்கலாம் என்று தெரிவித்தார்.

கட்டுப்படுத்த வேண்டும்

அதைத்தொடர்ந்து நீதிபதிகள், ‘இது கொண்டாட்டத்துக்கான நேரம் அல்ல. ஊரடங்கு காலத்தில் மக்கள் கூட்டம் அதிகரிப்பதை தடுக்க வேண்டும். மக்களுக்கு ஏற்படும் அசவுகரியங்களை குறைப்பதற்காகவே தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதை அவர்கள் உணரும் வகையிலும், அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றக்கூடாது எனவும் ஒலிபெருக்கிகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

ஊரடங்கில் இருந்து தளர்வு மட்டுமே அளிக்கப்பட்டுள்ள நிலையில், இயல்புநிலை திரும்பியதாக நினைத்து தேவையின்றி வெளியில் வருபவர்களை கட்டுப்படுத்த வேண்டும்' என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

Next Story