அ.தி.மு.க.-வை எனது உயிரில் இருந்து பிரிக்க முடியாது...! சசிகலாவின் 23- வது வீடியோ...!


அ.தி.மு.க.-வை எனது உயிரில் இருந்து பிரிக்க முடியாது...! சசிகலாவின் 23- வது வீடியோ...!
x
தினத்தந்தி 10 Jun 2021 9:51 AM GMT (Updated: 10 Jun 2021 9:51 AM GMT)

அ.தி.மு.க.வை எனது உயிரில் இருந்து பிரிக்க முடியாது என்று தாம் வெளியிட்டுள்ள புதிய ஆடியோவில் வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.

சென்னை

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்த சசிகலா, சிறைத் தண்டனை முடிந்து விடுதலையானதும் மீண்டும் கட்சித் தலைமை ஏற்பார் என தொண்டர்கள் உற்சாகத்தில் காத்திருந்தனர். அவர் விடுதலையாகி வந்தபோது தொண்டர்களால் உற்சாக வரவேற்பும் அளிக்கப்பட்டது. ஆனால், 'அரசியலிலிருந்து விலகியிருக்கப்போவதாக' 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டார் சசிகலா. இதனால் தொண்டர்கள் வருத்தத்துக்கு உள்ளானார்கள்.

இந்த நிலையில் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அ.தி.மு.க. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஆட்சியை பிடிக்க முடியாத அளவுக்கு தோல்வியை சந்தித்தது.

65 தொகுதிகளில் மட்டுமே அ.தி.மு.க. வெற்றி பெற்றது.  அ.தி.மு.க.   ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு இடையே ஒருமித்த கருத்து இல்லாமல் தேர்தலை சந்தித்ததே தோல்விக்கு காரணம் என்று கட்சி நிர்வாகிகள் பலர் குற்றம் சாட்டி வந்தனர்.

இந்த நிலையில் அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த  சசிகலா  தற்போது  அ.தி.மு.க.  நிர்வாகிகளிடம் தொலைபேசியில் பேசி வருவது கட்சி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

சசிகலா ஆடியோ குறித்து  கருத்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமி  ‘‘சசிகலா  அவரது கட்சியினருடன் தான் பேசி உள்ளார். அ.தி.மு.க.வினர் யாருடனும் அவர் பேசவில்லை’’ என்று திட்டவட்டமாக கூறினார்.

கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த முயல்வதாக சசிகலா மீது முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அ.தி.மு.க-வில் சசிகலாவுக்கு இடமே இல்லை என்று முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

அதிமுக-வில் சசிகலாவை சேர்த்துக்கொள்ள முடியாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்த நிலையில், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகமும் அதே கருத்தை தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில் அ.தி.மு.க. கட்சி நிர்வாகிகளுடன் சசிகலா தொலைபேசியில் பேசும் ஆடியோவும் அடுத்தடுத்து சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் உளுந்தூர்பேட்டை ஆனந்தனிடம்   சசிகலா  பேசும்  ஆடியோவும் நேற்று வெளியாகியது. இன்னும் அடுத்தடுத்து   அ.தி.மு.க.  நிர்வாகிகளுடன் பேசும் ஆடியோவும் வெளிவர உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

அ.தி.மு.க.-வை எனது உயிரில் இருந்து பிரிக்க முடியாது என்று தாம் வெளியிட்டுள்ள புதிய ஆடியோ  வி.கே.சசிகலா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

தற்போது தனது 23வது ஆடியோ உரையாடலை வெளியிட்டுள்ள சசிகலா, அதில் காரைக்குடியை சேர்ந்த பாஸ்கரன் என்ற அ.தி.மு.க தொண்டருடன் பேசியுள்ளார். அதிமுக-வை நல்ல நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்று கூறும் சசிகலா, கட்சிக்காக தாம் நிறைய பாடுபட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். .

அ.தி.மு.க.வை எனது உயிரில் இருந்து பிரிக்க முடியாது என்றும் அவர் தனது பேச்சில் குறிப்பிட்டுள்ளார். தொண்டர்களின் மன குமுறலை அறிந்த பிறகே தாம் அவர்களுடன் தொலைபேசியில் பேசி வருவதாகவும் சசிகலா குறிப்பிட்டுள்ளார்.

Next Story