திருச்சிக்கு 2 நாள் பயணம்: மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து விடுகிறார்


திருச்சிக்கு 2 நாள் பயணம்: மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து விடுகிறார்
x
தினத்தந்தி 10 Jun 2021 10:00 PM GMT (Updated: 10 Jun 2021 10:00 PM GMT)

திருச்சிக்கு 2 நாள் அரசு முறை பயணம் மேற்கொள்ளும் மு.க.ஸ்டாலின் பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுகிறார். தன்னை சந்திக்க தொண்டர்கள் ஆர்வம் காட்ட வேண்டாம் என்றும் நோய்த்தொற்று இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கிவிட்டு அவர்களின் அன்பு முகம் காண நேரில் வருவதாகவும் கூறியுள்ளார்.

சென்னை,

நம் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கருணாநிதியின் தொண்டர்களுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல். ஓய்வறியாச் சூரியனாம் நம் தலைவரின் ஓய்விடத்தில் எடுத்துக் கொண்ட சூளுரையின்படி, தமிழ்நாட்டில் மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைந்து, ஒரு மாதகாலம் கடந்திருக்கிறது.

பொறுப்பேற்பதற்கு முன்பே கொரோனா பேரிடர் நிலையை உணர்ந்து - பாரபட்சமற்ற அணுகுமுறையுடன் மக்களின் உயிர் காக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மே 7-ந்தேதி முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்ட நானும் அமைச்சரவையில் உள்ள அனைவரும் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் 24 மணிநேரமும் மக்கள் நலனையே முதன்மையாகக் கொண்டு செயலாற்றியதன் விளைவாக, நோய்த்தொற்று சங்கிலியை உடைக்கும் முயற்சிக்கு ஓரளவு நல்ல பலன் கிடைத்திருக்கிறது.

காலமறிந்து கூவுகின்ற சேவல்

10 ஆண்டு கால இருட்டிலிருந்து மீண்டு, உதயசூரியனாம் ஞாயிறு வெளிச்சத்தில் தமிழ்நாடு ஒரு மாத காலத்தைக் கடந்திருக்கும் நிலையில், அனைத்துத் தரப்பிலிருந்தும் தி.மு.க. அரசுக்கு வாழ்த்துகள் வந்தவண்ணம் உள்ளன. ஊடகங்கள் உண்மை நிலையை உரைக்கின்றன. கட்சி எல்லைகளைக் கடந்து தி.மு.க. அரசு பாராட்டுகளைப் பெற்றுள்ளது. பல்வேறு துறையினரும் ஆதரவளிக்கின்றனர். பொதுமக்கள் தங்களின் நம்பிக்கை வீண்போகவில்லை என்ற நிம்மதி அடைந்துள்ளனர்.

கொரோனா தொற்று அதிகமாக இருந்த கோவை உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வுகள் மேற்கொண்டேன்.

காலமறிந்து கூவுகின்ற சேவலாக ஒவ்வொரு செயல்பாடும் தொடர்கிறது. அந்த வகையில் திருச்சி - தஞ்சை மாவட்டங்களில் காவிரிப் பாசனப் பகுதிகளில் நடைபெறும் தூர்வாரும் பணிகளைப் பார்வையிடவும், சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையினைத் திறந்து டெல்டா உழவர்களின் தாய்ப்பாலாக விளங்கும் காவிரி நீரைக் குறுவை சாகுபடிக்கு வழங்கிடவும் 2 நாள் பயணத்தை மேற்கொள்கிறேன்.

தூர்வாரும் பணி

நாளை (இன்று) திருச்சிக்குப் பயணித்து, திருச்சி - தஞ்சை மாவட்டங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறேன். சோழ மன்னன் கரிகாலன் அமைத்த கல்லணையும் அதனைத் தொடர்ந்து சோழ அரசர்கள் பலர் மேற்கொண்ட நீர் மேலாண்மைத் திட்டங்களும் காவிரி பாசனப் பகுதியின் கடைமடை வரை செழிப்புறச் செய்திருந்தன.

அந்த உன்னத நிலையை ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு, கருணாநிதி தனது ஆட்சிக்காலத்தில் மேற்கொண்ட தூர்வாரும் பணிகள் வாயிலாக மீட்டெடுத்தார். அவர் வழியில், காவிரிப் பாசனப் பகுதியில் 4,061 கி.மீ. தூரத்திற்குத் தூர்வாரும் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படுகின்றன.

தண்ணீர் திறப்பு

கடைமடை வரை இந்த பணிகள் செம்மையாக நடைபெறுவதை உறுதி செய்து, ஜூன் 12-ந்தேதி சேலம் மாவட்டத்தில் ஆய்வுப் பணிகள் - ஆலோசனைக் கூட்டங்கள் - நலத்திட்ட உதவிகளில் பங்கேற்று அதன்பின் மேட்டூர் அணையிலிருந்து காவிரிப் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட இருக்கிறேன்.

முறையாகத் தூர்வாரி, புதுப்புனல் பெருக்கெடுத்தோட வழி செய்வதன் வாயிலாக டெல்டா மாவட்டங்களில் லட்சக்கணக்கான ஹெக்டேர் நிலத்தில் குறுவை சாகுபடி சிறப்பாக அமையும். விவசாயிகளின் வாழ்வாதாரம் மலரும்.

சந்திக்க வர வேண்டாம்

மக்கள் நலன் காக்கும் மற்றொரு பயணமாக, மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் நான் மேற்கொள்ளவிருப்பவை முழுக்க முழுக்க அரசுப் பணிகள் சார்ந்தவை என்பதால் அந்தந்த மாவட்ட ஒன்றிய, நகர, பேரூர் - கிளைக்கழக நிர்வாகிகள் - செயல்வீரர்கள் உள்ளிட்ட அன்புக்குரிய தொண்டர்கள் என்னை நேரில் சந்திப்பதற்கு ஆர்வம் காட்ட வேண்டாம் என்பதையும், வரவேற்பு அலங்காரங்கள் எதிலும் ஈடுபட வேண்டாம் என்பதையும் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

நான் ஏற்கனவே திருச்சியில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததுபோல, கொரோனா நோய்த்தொற்று முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டு, மக்களின் உயிர்ப்பாதுகாப்பை உறுதி செய்யும் நாள்தான் மகிழ்ச்சியான நாளாக - வெற்றிகரமான நாளாக அமையும். நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக நாளொன்றுக்கு 35 ஆயிரத்திற்கும் மேல் இருந்த நோய்த்தொற்று எண்ணிக்கை ஏறத்தாழ சரிபாதியாகக் குறைந்து, 17 ஆயிரம் என்கிற அளவிற்கு இறங்கி வந்துள்ளது. எனினும், முழுமையான அளவில் நோய்த்தொற்று சங்கிலியை உடைக்க வேண்டியுள்ளது.

பாரமாக அழுத்துகிறது

அதிலும், நான் பயணம் மேற்கொள்ளவிருக்கும் மூன்று மாவட்டங்களில் தஞ்சையும் சேலமும் நோய்த்தொற்று எண்ணிக்கை சற்று கூடுதலாக உள்ள மாவட்டங்கள். எனவே, தொண்டர்களாகிய நீங்களும் உங்களில் ஒருவனான நானும் ஊரடங்கு கால நெறிமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.

தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிப் பொறுப்பேற்று ஒரு மாதம் கடந்தும், இந்த ஆட்சி அமைவதற்கான அயராத உழைப்பை அல்லும் பகலும் வழங்கிய தொண்டர்களை காண முடியவில்லையே என்ற ஏக்கம் எனக்குள்ளும் இருக்கிறது. ஒவ்வொரு பயணத்தின்போதும், உங்கள் ஆர்வத்திற்குத் தடை போடும் அறிவிப்பை வெளியிட வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டிருப்பதும் இதயத்தில் பாரமாக அழுத்துகிறது.

கட்டுப்பாடு காக்க வேண்டும்

‘கடமை’யை நான் நிறைவேற்ற வேண்டியிருப்பதால் - ‘கண்ணிய’மிக்க செயல்பாடு என்பது நீங்கள் ‘கட்டுப்பாடு’ காப்பதுதான். பேரிடர் காலத்தினால் நாம் கட்டுண்டு இருக்கிறோம். பொறுத்திருப்போம். காலம் விரைவில் மாறும். நோய்த் தொற்று இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கிவிட்டு உங்கள் அன்பு முகம் காண நேரில் வருவேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story