பிரசவத்துக்கு சென்ற போது துயரம் மரத்தில் ஆம்புலன்ஸ் மோதி கர்ப்பிணி உள்பட 3 பெண்கள் பலி


பிரசவத்துக்கு சென்ற போது துயரம் மரத்தில் ஆம்புலன்ஸ் மோதி கர்ப்பிணி உள்பட 3 பெண்கள் பலி
x
தினத்தந்தி 10 Jun 2021 11:00 PM GMT (Updated: 10 Jun 2021 11:00 PM GMT)

பிரசவத்துக்கு சென்ற போது, மரத்தில் ஆம்புலன்ஸ் மோதியதில் கர்ப்பிணி உள்பட 3 பெண்கள் பலியாகினர்.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அரசு மகன் கண்ணன்(வயது 28), விவசாயி. இவருடைய மனைவி ஜெயலட்சுமி (23). இவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த பெண் குழந்தை உடல்நலம் பாதிக்கப்பட்டு, இறந்து போனது. இந்த நிலையில் ஜெயலட்சுமி மீண்டும் கர்ப்பமானார்.

பிரசவ வலி

நிறைமாத கர்ப்பிணியான ஜெயலட்சுமிக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை உறவினர்கள் புதுப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், ஜெயலட்சுமியை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லுமாறு கூறினார். இதையடுத்து, 108 ஆம்புலன்சில் ஜெயலட்சுமி, அவருடைய மாமியார் செல்வி(50), நாத்தனார் அம்பிகா (32) மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஊழியரான புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்த பெரியசாமி மனைவி மீனா ஆகியோர் கள்ளக்குறிச்சிக்கு புறப்பட்டனர்.

மரத்தில் மோதல்

அந்த ஆம்புலன்சை ஆரூர் கிராமத்தை சேர்ந்த கலியமூர்த்தி என்பவர் ஓட்டினார். ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளராக மூங்கில்துறைப்பட்டை சேர்ந்த திருமால் மனைவி தேன்மொழி என்பவர் பணியில் இருந்தார்.

கள்ளக்குறிச்சி அருகே ஆலத்தூர்-அரியபெருமானூர் இடையே உள்ள ஏரிக்கரை அருகில் அதிகாலை 4 மணிக்கு சென்றபோது, ஆம்புலன்ஸ் எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. இடிபாடுகளில் சிக்கி உடல் நசுங்கி செல்வி, அம்பிகா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஜெயலட்சுமி, மீனா, கலியமூர்த்தி, தேன்மொழி ஆகியோர் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினர்.

கர்ப்பிணி பலி

விபத்து பற்றி தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் படுகாயம் அடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மற்றொரு ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு ஜெயலட்சுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து மற்ற 3 பேருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story