ஐதராபாத், புனேவில் இருந்து தமிழகத்துக்கு ஒரே நாளில் 99 ஆயிரம் தடுப்பூசிகள் வந்தன


ஐதராபாத், புனேவில் இருந்து தமிழகத்துக்கு ஒரே நாளில் 99 ஆயிரம் தடுப்பூசிகள் வந்தன
x
தினத்தந்தி 10 Jun 2021 11:40 PM GMT (Updated: 10 Jun 2021 11:40 PM GMT)

ஐதராபாத் மற்றும் புனேவில் இருந்து தமிழகத்துக்கு மத்திய அரசு தொகுப்பு மற்றும் தமிழக அரசின் நேரடி கொள்முதல் மூலம் ஒரே நாளில் 99 ஆயிரம் தடுப்பூசிகள் சென்னை வந்தன.

ஆலந்தூர்,

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தமிழகத்துக்கு இதுவரை மத்திய தொகுப்பில் இருந்தும், தமிழக அரசின் நேரடி கொள்முதல் மூலமாகவும் 1 கோடியே 1 லட்சத்து 63 ஆயிரத்து 960 ‘கோவிஷீல்டு’ மற்றும் ‘கோவேக்சின்’ தடுப்பூசிகள் வந்து உள்ளன.

இந்த நிலையில் தமிழகத்தின் பல பகுதிகளில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால் தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டன. இதனால் தடுப்பூசி போட ஆர்வத்துடன் வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

எனவே தமிழகத்தில் தடுப்பூசி சுத்தமாக கையிருப்பில் இல்லை என்பதால் உடனடியாக தடுப்பூசிகளை அனுப்புமாறு மத்திய அரசுக்கு சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவசர செய்தி அனுப்பினார்.

99 ஆயிரம் தடுப்பூசிகள் வந்தன

இந்த நிலையில் நேற்று காலை ஐதராபாத்தில் இருந்து சரக்கு விமானத்தில் தமிழக அரசு கொள்முதல் செய்த 85 ஆயிரம் ‘கோவேக்சின்’ தடுப்பூசிகள் சென்னை வந்தன. இவை தேனாம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவ கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டன.

அதைதொடர்ந்து மத்திய தொகுப்பில் இருந்து நேற்று மதியம் புனேவில் இருந்து 2 பெட்டிகளில் மொத்தம் 14 ஆயிரத்து 420 தடுப்பூசிகள் சென்னை வந்தன. அந்த தடுப்பூசிகள் பெரியமேட்டில் உள்ள மத்திய கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.

அதன்படி ஐதராபாத் மற்றும் புனேவில் இருந்து தமிழகத்துக்கு மத்திய தொகுப்பு மற்றும் தமிழக அரசு கொள்முதல் என ஒரே நாளில் 99 ஆயிரத்து 420 தடுப்பூசிகள் வந்தன. இவை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story