மதுபாட்டில் விலை உயர்கிறது தமிழகத்தில், ‘டாஸ்மாக்’ கடைகள் 14-ந்தேதி முதல் திறப்பு? முக்கிய அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்பு


மதுபாட்டில் விலை உயர்கிறது தமிழகத்தில், ‘டாஸ்மாக்’ கடைகள் 14-ந்தேதி முதல் திறப்பு? முக்கிய அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்பு
x
தினத்தந்தி 11 Jun 2021 12:27 AM GMT (Updated: 11 Jun 2021 12:27 AM GMT)

தமிழகத்தில் ‘டாஸ்மாக்’ கடைகளை 14-ந்தேதி முதல் திறக்கலாமா? என்பது குறித்து தீவிர பரிசீலனை நடந்து வருகிறது. அப்படி கடைகள் திறக்கப்படும் பட்சத்தில் மதுபாட்டில் விலையை உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான முக்கிய அறிவிப்பு இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை,

தமிழகத்தில் 5 ஆயிரத்து 432 ‘டாஸ்மாக்’ மதுக்கடைகள் இருக்கின்றன. இந்தநிலையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்டு இருக்கும் முழு ஊரடங்கு காரணமாக ‘டாஸ்மாக்’ மதுக்கடைகள் கடந்த மாதம் (மே) 10-ந்தேதி முதல் மூடப்பட்டு இருக்கின்றன. பல மாநிலங்களில் ஊரடங்கில் கொண்டு வரப்பட்ட தளர்வுகள் காரணமாக மதுக்கடைகள் திறக்கப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில் ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலும், சமீபத்தில் புதுச்சேரியிலும் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.

இதையடுத்து அண்டை மாநிலங்களில் இருந்து மதுபாட்டில்கள் பதுக்கி தமிழகம் கொண்டு வரும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இதுதொடர்பாக பல்வேறு சம்பவங்களில் போலீசாரும் ஏராளமான மதுபாட்டில்களை கைப்பற்றிய சம்பவங்களும் நடந்தன. மேலும் தமிழக எல்லையோரம் வசிக்கும் மக்களும் அண்டை மாநிலங்களுக்கு சென்று மதுபாட்டில்கள் வாங்கிக்கொண்டு வருவதும், போலீசாரிடம் சிக்கி நடவடிக்கைகளுக்கு உட்படுவதும் தொடர்கதையாகி வருகிறது.

அரசுக்கு வருவாய் இழப்பு

இதுபோதாதென்று சாராயம் காய்ச்சும் சம்பவங்களும் ஆங்காங்கே நிகழ்ந்துகொண்டு இருக்கின்றன. யூ-டியூப் போன்ற சமூக வலைதளங்களை பார்த்து வீட்டிலேயே மது தயாரித்து சிக்கலில் சிக்குவோர்களும் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இப்படி மதுக்கடைகள் மூடல் காரணமாக பலர் சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இதற்கிடையில் மதுக்கடைகளை திறந்து மதுபாட்டில்களை கைப்பற்றி கூடுதல் விலைக்கு வெளிச்சந்தையில் விற்பனை செய்யும் சம்பவங்களும் ஒருபுறம் அரங்கேறி கொண்டுதான் இருக்கின்றன. இதனால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அதேவேளை ‘டாஸ்மாக்’ கடைகள் மூடப்பட்டிருப்பதால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பும் ஏற்பட்டு கொண்டிருக்கிறது என்பதும் மறுக்கமுடியாத உண்மையாக இருக்கிறது.

14-ந்தேதி திறக்கலாமா?

இதனால் அண்டை மாநிலங்கள் போல தமிழகத்திலும் மதுக்கடைகள் திறப்பு குறித்து அரசு தீவிரமாக திட்டமிட்டு வருகிறது. குறிப்பாக தற்போது அமலில் இருக்கும் முழு ஊரடங்கு 14-ந்தேதி காலை 6 மணியுடன் நிறைவடைகிறது. எனவே 14-ந்தேதி முதல் ‘டாஸ்மாக்’ மதுக்கடைகளை திறக்கலாமா? என்பது குறித்து ‘டாஸ்மாக்’ நிர்வாகம் தீவிர பரிசீலனை மேற்கொண்டு வருகிறது. அப்படி ‘டாஸ்மாக்’ கடைகள் திறக்கப்படும் பட்சத்தில் மதுபாட்டில்கள் விலையையும் குறிப்பிட்ட அளவு உயர்த்த திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் தெரியவருகிறது. மேலும் ‘டாஸ்மாக்’ மதுக்கடை திறப்பு குறித்த முக்கிய முடிவு இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘டாஸ்மாக்’ மதுக்கடைகள் மூடலால், துவண்டு கிடந்த மதுப்பிரியர்கள் இந்த தகவலால் உற்சாகத்தில் துள்ளி குதிக்க தொடங்கியுள்ளனர். மதுக்கடைகள் எப்போது திறக்கும்? என்று வழிமேல் விழி வைத்து எதிர்பார்ப்போடு காத்து கிடக்கிறார்கள்.

Next Story