தஞ்சை வெண்ணாற்றில் நடைபெறும் தூர்வாரும் பணிகள் - முதல்-அமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு


தஞ்சை வெண்ணாற்றில் நடைபெறும் தூர்வாரும் பணிகள் - முதல்-அமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 11 Jun 2021 8:00 AM GMT (Updated: 11 Jun 2021 8:00 AM GMT)

தஞ்சை வெண்ணாறு வடிகால் வாய்க்கால்களில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை முதல்-அமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர்,

டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக ஜூன் மாதம் தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், அதிகாரிகள் மற்றும் விவசாய பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி, வரும் ஜூன் 12 ஆம் தேதி (நாளை) மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதல்-அமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

இதையத்து சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் நாளை தண்ணீர் திறந்து வைக்க உள்ள முதல்-அமைச்சர் ஸ்டாலின், இன்றைய தினம் திருச்சி கல்லணை கால்வாயில் நடைபெறும் சீரமைப்பு பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, அமைச்சர் கே.என்.நேரு, நிர்வளத்துறை மற்றும் பொதுப்பணித்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதனை தொர்ந்து அங்கிருந்து தஞ்சை மாவட்டத்திற்கு காரில் வந்து சேர்ந்த முதல்-அமைச்சர் ஸ்டாலின், அங்கு பல்வேறு இடங்களில் நடந்து வரும் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார். தஞ்சை மாவட்டத்தில் 20.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 185 இடங்களில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

அந்த வகையில் தஞ்சை வல்லம் அருகே முதலை முத்துவாரி ஆற்றில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து தஞ்சை பள்ளி அக்ரஹாரம் அருகே வெண்ணாற்றில் நடந்து வரும் தூர்வாரும் பணியை முதல்-அமைச்சர் ஆய்வு செய்தார். அங்கு நடைபெறும் பணிகள் குறித்து அதிகாரிகள் அவரிடம் விளக்கமளித்தனர். 

இதனை தொடர்ந்து சேலம் மேட்டூர் அணையில் நாளை பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில், முதல்-அமைச்சர் ஸ்டாலின், சிறப்பு விமானம் மூலம் சேலத்திற்கு புறப்பட்டு செல்கிறார்.

Next Story