கடன் வாங்கியதில் பிரச்சினை நடிகர் விஷாலுக்கும், தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்திரிக்கும் சம்மன் போலீஸ் நிலையத்தில் ஆஜராக உத்தரவு


கடன் வாங்கியதில் பிரச்சினை நடிகர் விஷாலுக்கும், தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்திரிக்கும் சம்மன் போலீஸ் நிலையத்தில் ஆஜராக உத்தரவு
x
தினத்தந்தி 11 Jun 2021 7:42 PM GMT (Updated: 11 Jun 2021 7:42 PM GMT)

கடன் வாங்கிய பிரச்சினையில் நடிகர் விஷாலுக்கும், தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்திரிக்கும் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக அந்த சம்மனில் உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை,

பிரபல நடிகர் விஷால், பிரபல சினிமா தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்திரி மீது சென்னை தியாகராயநகர் துணை கமிஷனரிடம் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில், தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்திரியிடம் சினிமா தயாரிப்புக்காக கடன் வாங்கி இருந்தேன். அந்தக் கடனை திருப்பிச் செலுத்திவிட்டேன். ஆனால் கடனுக்காக நான் கொடுத்த பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை ஆர்.பி.சவுத்திரி திருப்பித்தராமல் ஏமாற்றுகிறார். அவற்றை வாங்கித் தருமாறு கேட்டுக்கொள்வதாக குறிப்பிட்டிருந்தார்.

அதற்கு பதில் அளித்த ஆர்.பி.சவுத்திரி, விஷால் வாங்கிய கடனை திருப்பிக் கொடுத்துவிட்டார். ஆனால் கடனுக்காக விஷாலிடம் வாங்கிய பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை இயக்குனர் சிவகுமார் என்பவரிடம் கொடுத்துவைத்ததாகவும், அவர் இறந்துவிட்டதால், குறிப்பிட்ட ஆவணங்களை அவர் எங்கு வைத்திருந்தார் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், ஆவணங்களைத் தேடிக் கண்டுபிடித்து கொடுத்துவிடுவதாகவும் தெரிவித்தார்.

போலீசார் சம்மன்

விஷால் கொடுத்த புகார் மனு மீது கோடம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விஷாலுக்கும், ஆர்.பி.சவுத்திரிக்கும் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளதாக தெரிகிறது. அந்த சம்மனில், விசாரணைக்கு போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இருவரிடமும் விசாரணை நடத்திவிட்டு அதன்பிறகு மேல் நடவடிக்கை எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்

Next Story