நவம்பர், டிசம்பர் மாதங்களில் தமிழகத்தை கொரோனா 3-வது அலை தாக்குமா? அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்


நவம்பர், டிசம்பர் மாதங்களில் தமிழகத்தை கொரோனா 3-வது அலை தாக்குமா? அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
x
தினத்தந்தி 11 Jun 2021 8:57 PM GMT (Updated: 11 Jun 2021 8:57 PM GMT)

தமிழகத்தில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் கொரோனா 3-வது அலை வரப்போகிறதா என்பது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்தார்.

சென்னை,

மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்ட 3.65 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகளை சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள தடுப்பூசி மருந்துகள் சேமிப்பு கிடங்குக்கு கொண்டு வரப்பட்டதையடுத்து, அங்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் ஏறத்தாழ 50 ஆயிரம் படுக்கைகள் காலியாக இருக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை ஆக்சிஜன் வசதியுடன் கூடியவை. மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. ஒருவருக்கு தடுப்பூசி போடுவதை மெதுவாகத்தான் செய்ய வேண்டும். ஒருவேளை இதை மனதில் வைத்துதான், தடுப்பூசி போடும் பணி ஆமை வேகத்தில் செல்கிறது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பார்.

அச்சம் தேவையில்லை

முதல்-அமைச்சர் மேற்கொண்ட தீவிர நடவடிக்கையின் காரணமாகத்தான், 21-ந் தேதிக்கு பிறகு மத்திய அரசு 75 சதவீத தடுப்பூசிகளை கொள்முதல் செய்து மாநில வாரியாக பிரித்தனுப்புவோம் என்று கூறியிருக்கிறது.

கொரோனா 3-வது அலை வந்தாலும் அதை சமாளிக்கத் தேவையான கட்டமைப்பு வசதிகள் தமிழகத்தில் இருக்கிறது. இப்போது அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் அனைத்திலும் ஆக்சிஜன் வசதியுடன் படுக்கைகள் ஏற்படுத்தப்படுகின்றன. எனவே 3-வது அலை வந்தாலும் அச்சப்படத்தேவையில்லை.

தமிழகத்தில் 3-வது அலை?

இங்கிலாந்தில் 3-வது அலை உருவாகி தினசரி பாதிப்பு 6 ஆயிரம் என்ற அளவில் உயர்ந்துள்ளது. இங்கிலாந்தில் வந்ததால், தமிழகத்திலும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் 3-வது அலை வரும் என சொல்லப்படுகிறது. அது நடக்காமல் இருந்தால் நல்லது.

தமிழகத்தில் இதுவரை 97 லட்சத்து 65 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கையிருப்பில் 85 ஆயிரம் இருந்தது. தற்போது 3 லட்சத்து 65 ஆயிரம் தடுப்பூசிகள் வந்துள்ளன. இந்த தடுப்பூசிகள் தேவைக்கு ஏற்ப மாவட்டங்களுக்கு பிரித்தனுப்பப்படும்.

இதுவரை ஆயிரத்து 299 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான மருந்துகள் கையிருப்பில் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

தடுப்பூசி தயாரிக்க தயார்

பின்னர் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

செங்கல்பட்டு தடுப்பூசி நிறுவனம் எப்போது வேண்டுமானாலும் தடுப்பூசிகளை தயாரிக்க தயார்நிலையில் இருக்கிறது.

இதுதொடர்பாக முதல்-அமைச்சர் தொடர்ந்து மத்திய அரசிடம் பேசிக்கொண்டிருக்கிறார். அதேபோல் குன்னூர் தடுப்பூசி தயாரிப்பு மையத்தில் தடுப்பூசி தயாரிக்க மத்திய அரசிடம் பேசி வருகிறோம்.

கருப்பு பூஞ்சைக்கு சிகிச்சை அளிப்பதற்கான வழிமுறைகளை வல்லுநர்கள் அடங்கிய குழு தயாரித்து கொண்டிருக்கிறது. விரையில் அவை வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story