கோவை, சென்னையில் தொடர்ந்து பாதிப்பு குறைகிறது: தமிழகத்தில் 15,759 பேருக்கு கொரோனா


கோவை, சென்னையில் தொடர்ந்து பாதிப்பு குறைகிறது: தமிழகத்தில் 15,759 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 11 Jun 2021 10:55 PM GMT (Updated: 11 Jun 2021 10:55 PM GMT)

தமிழகத்தில் கோவை, சென்னையில் தொடர்ந்து பாதிப்பு குறைகிறது. நேற்று ஒரே நாளில் 15,759 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டு வருகிறது. குறிப்பாக சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலத்தில் பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், தற்போது அந்த பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. ஆனால் உயிரிழப்புகள் மட்டும் தினசரி ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. அந்தவகையில், தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று புதிதாக 1 லட்சத்து 72 ஆயிரத்து 838 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 8,769 ஆண்கள், 6,990 பெண்கள் என மொத்தம் 15 ஆயிரத்து 759 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 2 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 661 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 2,500 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர்.

378 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக கோவையில் 2,056 பேரும், சென்னையில் 1,094 பேரும், ஈரோட்டில் 1,365 பேரும், திருப்பூரில் 853 பேரும், சேலத்தில் 916 பேரும், குறைந்தபட்சமாக பெரம்பலூரில் 96 பேரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 2 கோடியே 88 லட்சத்து 63 ஆயிரத்து 236 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. அதில் 13 லட்சத்து 62 ஆயிரத்து 204 ஆண்களும், 9 லட்சத்து 62 ஆயிரத்து 355 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 38 பேரும் உள்பட 23 லட்சத்து 24 ஆயிரத்து 597 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதில் 12 வயதுக்கு உட்பட்ட 83 ஆயிரத்து 661 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 3 லட்சத்து 33 ஆயிரத்து 889 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர். கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 240 பேரும், தனியார் மருத்துவமனையில் 138 பேரும் என 378 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் 59 பேர் பலி

அந்தவகையில் அதிகபட்சமாக சென்னையில் 59 பேரும், கோவையில் 31 பேரும், கடலூரில் 22 பேரும், திருச்சி, திருவள்ளூரில் தலா 20 பேரும், செங்கல்பட்டில் 16 பேரும், கன்னியாகுமரியில் 15 பேரும், சேலம், தேனி, திருப்பத்தூர், திருப்பூரில் தலா 13 பேரும், ஈரோடு, அரியலூரில் தலா 11 பேரும், வேலூர், நாகப்பட்டினத்தில் தலா 9 பேரும், தூத்துக்குடி, தஞ்சாவூரில் தலா 8 பேரும், காஞ்சீபுரம், மதுரை, நாமக்கலில் தலா 7 பேரும், கரூர், திருவாரூரில் தலா 6 பேரும், தென்காசி, பெரம்பலூர், திண்டுக்கலில் தலா 5 பேரும், விருதுநகர், ராமநாதபுரத்தில் தலா 4 பேரும், ராணிப்பேட்டை, தருமபுரியில் தலா 3 பேரும், விழுப்புரம், சிவகங்கை, கிருஷ்ணகிரியில் தலா 2 பேரும், நெல்லை, புதுக்கோட்டையில் தலா ஒருவரும் உள்பட 36 மாவட்டங்களில் 378 பேர் உயிரிழந்துள்ளனர்.

29,243 பேர் ‘டிஸ்சார்ஜ்’

உயிரிழந்தவர்களில் 80 பேர் இணை நோய் அல்லாதவர்கள் ஆவர். அந்தவகையில் தமிழகத்தில் இதுவரை 28 ஆயிரத்து 906 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 29,243 பேர் ‘டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர். இதுவரையில் 21 லட்சத்து 20 ஆயிரத்து 889 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 1 லட்சத்து 74 ஆயிரத்து 802 பேர் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story