நாடு முழுவதும் கொரோனா மரணங்கள் முறையாக பதிவு செய்யப்படுவது இல்லை என குற்றச்சாட்டு ஐகோர்ட்டு நீதிபதிகள் கவலை


நாடு முழுவதும் கொரோனா மரணங்கள் முறையாக பதிவு செய்யப்படுவது இல்லை என குற்றச்சாட்டு ஐகோர்ட்டு நீதிபதிகள் கவலை
x
தினத்தந்தி 11 Jun 2021 11:58 PM GMT (Updated: 11 Jun 2021 11:58 PM GMT)

நாடு முழுவதும் கொரோனா மரணங்கள் முறையாக பதிவு செய்யப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது என்று ஐகோர்ட்டு நீதிபதிகள் கவலை தெரிவித்தனர்.

சென்னை,

கொரோனா தொற்றால் இறந்துபோகும் நபர்களுக்கு, கொரோனா காரணமாக மரணம் ஏற்பட்டது என இறப்பு சான்றிதழ்களில் குறிப்பிடப்படாததால் மத்திய, மாநில அரசுகள் வழங்கும் நிவாரண உதவிகள் மறுக்கப்படுகின்றன.

வக்கீல் கண்ணன் என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தநிலையில், அவர் மூச்சுத்திணறலால் இறந்தார் என சான்று வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா மரணம் என இறப்பு சான்றிதழில் குறிப்பிடப்படாததால், பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கும், குடும்பத்துக்கும் அரசின் நிதி உதவி கிடைப்பது தடைபடுகிறது. எனவே, கொரோனா மரணம் என்பதை இறப்பு சான்றிதழில் முறையாக பதிவுசெய்ய உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

நாடு முழுவதும் குற்றச்சாட்டு

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர், ‘கொரோனா மரணங்கள் முறையாக பதிவு செய்யப்படுவது இல்லை என நாடு முழுவதும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை, கொரோனா பாசிட்டிவ் என சான்றிதழ் இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட மரணங்களை கொரோனா மரணங்கள் என பதிவு செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது' என்று கவலை தெரிவித்தனர்.

நிபுணர் குழு மூலம் ஆய்வு

அதைத்தொடர்ந்து நீதிபதிகள், ‘கொரோனா மரணம் குறித்த தெளிவான பதிவுகள் இருந்தால்தான், எதிர்காலத்தில் தொற்று பரவலை சமாளிப்பது குறித்து ஆய்வுசெய்ய முடியும். கொரோனா இறப்புகளை துல்லியமாக குறிப்பிடுவது, நிவாரணம் வழங்க உதவியாக இருக்கும்’ என்று தெரிவித்தனர்.

பின்னர், ‘இணை நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும் கொரோனாவுக்குப் பலியாகி உள்ளதால், அவர்களுக்கு வழங்கப்பட்ட இறப்பு சான்றிதழ்களை நிபுணர் குழுவை கொண்டு தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

இதுதொடர்பாக எடுத்த நடவடிக்கை குறித்த ஆரம்பகட்ட அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை 28-ந் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

Next Story