டாஸ்மாக் திறப்புக்கு எதிராக பாஜகவினர் நாளை ஆர்ப்பாட்டம்: எல்.முருகன் அறிவிப்பு


டாஸ்மாக் திறப்புக்கு எதிராக பாஜகவினர் நாளை ஆர்ப்பாட்டம்: எல்.முருகன் அறிவிப்பு
x
தினத்தந்தி 12 Jun 2021 1:02 PM GMT (Updated: 12 Jun 2021 1:02 PM GMT)

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு எதிராக பாஜகவினர் நாளை ஆர்ப்பாட்டம் மேற்கொள்வர் என அக்கட்சியின் தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.


சென்னை,

தமிழகத்தில் மேலும் சில தளர்வுகளுடன் ஜூன் 21-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். எனினும், நோய்த்தொற்று அதிகம் உள்ள கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் அத்தியாவசியச் செயல்பாடுகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் பாதிப்பு குறைந்துள்ள சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் வரும் 15-ம் தேதி முதல், டாஸ்மாக் கடைகள் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் என, முதல்-அமைச்சர் தனது உத்தரவில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தமிழகத்தில் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு எதிராக பாஜகவினர் நாளை ஆர்ப்பாட்டம் மேற்கொள்வர் என அக்கட்சியின் தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

வீடுகளில் கருப்புக் கொடி ஏந்தி பாஜகவினர் ஆர்ப்பட்டத்தில் ஈடுபடுவர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Next Story