நாளை டாஸ்மாக் மதுக்கடைகள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 13 Jun 2021 4:37 AM GMT (Updated: 13 Jun 2021 4:37 AM GMT)

27 மாவட்டங்களில் நாளை முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படும் நிலையில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

சென்னை, 

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மாதம் 10-ந் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தொடக்கத்தில் எதிர்பார்த்த அளவுக்கு பலன் கிடைக்காததால், ஊரடங்கு 24-ந் தேதி முதல் 31-ந் தேதி வரையிலும், பின்னர் 31-ந் தேதியில் இருந்து 7-ந் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டது.

கடைசியாக அறிவித்த தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கின் காரணமாக கொரோனா தொற்று பாதிப்பு கணிசமாக குறைந்தது. பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 14-ந் தேதி காலை 6 மணி வரையிலும் நீட்டிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் ஊரடங்கினை 5-வது முறையாக மேலும் ஒரு வாரத்துக்கு, அதாவது ஜூன் 21-ந் தேதி காலை 6 மணி வரை தளர்வுகளுடன் நீட்டித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். 

11 மாவட்டங்களைத் தவிர, இதர 27 மாவட்டங்களில் நோய்த்தொற்று குறைந்து வருவதை கருத்தில் கொண்டு, ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுடன் கூடுதலாக கீழ்க்கண்ட செயல்பாடுகளும் அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

27 மாவட்டங்களில் நாளை முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படும் நிலையில், வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. 

இதன்படி மொத்தமாக மதுபானங்களை யாருக்கும் விற்க கூடாது. சில்லறையாக தான் விற்க வேண்டும்.

டாஸ்மாக் மதுபான கடைகளில் ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்கக்கூடாது.

மதுபானம் வாங்க வருவோர் 6 அடி இடைவெளிவிட்டு சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

ஒரு அடி சுற்றளவு கொண்ட வட்டத்தினை தடுப்பு வேலிக்குள் வரைய வேண்டும்.

கடைகளை திறக்கும் போதும், மூடும் போதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

பணியாளர்கள் கட்டாயம் மூன்றடுக்கு முகக்கவசம் அணிய வேண்டும்.

பணியாளர்கள், மதுபானம் வாங்க வருவோரை சமூக இடைவெளியுடன் வாங்குமாறு நடைமுறைப்படுத்த வேண்டும். 

கூட்டத்தை கட்டுப்படுத்த தடுப்பு வேலி போடப்பட்டிருக்க வேண்டும் உள்ளிட்ட 14 வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. 

Next Story