‘‘கொரோனா தீவிரம் குறைந்ததும் தொண்டர்களை சந்திப்பேன்’’ - புதிய ஆடியோவில் சசிகலா தகவல்


‘‘கொரோனா தீவிரம் குறைந்ததும் தொண்டர்களை சந்திப்பேன்’’ -  புதிய ஆடியோவில் சசிகலா தகவல்
x
தினத்தந்தி 13 Jun 2021 10:47 PM GMT (Updated: 13 Jun 2021 10:47 PM GMT)

‘‘கொரோனா தீவிரம் குறைந்ததும் தொண்டர்களை நிச்சயம் சந்திப்பேன்’’, என தொண்டர் ஒருவரிடம் சசிகலா பேசிய ஆடியோ பதிவு பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, 

தமிழக அரசியலில் திடீர் திருப்பமாக சசிகலாவின் பெயர் மீண்டும் முக்கியத்துவம் பெற தொடங்கியிருக்கிறது. தொண்டர்களுடன், சசிகலா பேசும் ஆடியோ பதிவுகள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இதனால் அரசியல் களம் மீண்டும் பரபரப்படைய தொடங்கியிருக்கிறது.

அந்தவகையில் முன்னாள் எம்.பி.யும், முன்னாள் எம்.எல்.ஏ.வும், அகில உலக எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளருமான சின்னசாமியிடம், சசிகலா பேசும் ஆடியோ ஒன்று தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அவரிடம், சசிகலா பேசும் ஆடியோ உரையாடல் தொகுப்பு விவரம் வருமாறு:-

தொண்டர்:- அம்மா வணக்கம்மா...

சசிகலா:- வணக்கம் சின்னசாமி... எப்படி இருக்கீங்க...

தொண்டர்:- நீங்க நல்லா இருந்தா... நாங்களும் நல்லா இருப்போம்மா...

சசிகலா:- சந்தோசம். ரொம்ப நாளாச்சு... உங்களிடம் பேசி...

தொண்டர்:- அம்மா... இனி நீங்க கட்சிக்கு வரணும்ம்மா.... அதுதான் எங்களுக்கு வேணும்

சசிகலா:- சரி... சரி... சரி...நீங்க எல்லாமே அம்மா (ஜெயலலிதா) தந்த பதவியில நல்லா இருந்தவங்க... பழைய ஆட்கள்

தொண்டர்:- எல்லாமே உங்களால வந்தது தானம்மா... அம்மாவுக்கு எல்லாமுமா நீங்க தான் இருந்தீங்க... அம்மா இருந்த காலத்துல உங்கள அடிக்கடி நான் வந்து சந்திப்பேன்.

சசிகலா:- ஆமா... ஆமா... ஆமா... இப்போ கொரோனா காலம். ஜாக்கிரதையாக இருங்க... நிலைமை ரொம்ப மோசமாக இருக்குது. இப்போ 2 நாளாக கொரோனா குறைஞ்சுட்டு வருது... கொரோனா தீவிரம் குறைஞ்ச பிறகு உங்க எல்லாத்தையும் நான் சந்திப்பேன்.

தொண்டர்:- நீங்க எப்போனு சொல்லுங்கம்மா... வந்து உங்களை சந்திக்கிறோம்.

சசிகலா:- கட்டாயம் சொல்றேன் சின்னசாமி. நீங்களாம் பழைய ஆட்கள். கொரோனா சரியாகட்டும். நாம் சந்திப்போம்.

தொண்டர்:- சரிம்மா.. உங்க தலைமையில இயங்க நாங்க எல்லாருமே தயாராக இருக்கோம்மா... நீங்க தலைமையேற்றால் தான் எல்லாமே சரியா வரும்மா...

சசிகலா:- அது உங்களுக்கும் தெரியுது.

தொண்டர்:- கூவத்தூரில் எடப்பாடி பழனிசாமிய கோபுரத்துல உட்கார வச்சீங்களே... அந்த நன்றிய நினைச்சு பாத்தாங்களா?

சசிகலா:- அதான்.... அதான்.... சரி என்ன பண்றது.

தொண்டர்:- உங்க தலைமை வரணும்மா...

சசிகலா:- சரி... சரி... நிச்சயம் நடக்கும். கட்டாயம் வரேன்.

இவ்வாறு அந்த உரையாடல் நிறைவு பெறுகிறது. இதேபோல சத்தியமங்கலம் ஒன்றிய செயலாளர் வரதராஜன், திருவண்ணாமலையை சேர்ந்த சிவா, மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி பிரவீன் ஆகியோருடனும் சசிகலா பேசும் ஆடியோக்களும் நேற்று வெளியானது.

Related Tags :
Next Story