குமரியை சேர்ந்தவர்கள்: கள்ளக்காதலியுடன் விஷம் குடித்த புதுமாப்பிள்ளை சாவு - பரபரப்பு தகவல்கள்


குமரியை சேர்ந்தவர்கள்: கள்ளக்காதலியுடன் விஷம் குடித்த புதுமாப்பிள்ளை சாவு - பரபரப்பு தகவல்கள்
x
தினத்தந்தி 14 Jun 2021 1:33 AM GMT (Updated: 14 Jun 2021 1:33 AM GMT)

கூடங்குளம் அருகே கள்ளக்காதலியுடன் விஷம் குடித்த புதுமாப்பிள்ளை பரிதாபமாக இறந்தார். இந்த பரபரப்பு சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

மேலகிருஷ்ணன்புதூர்,

குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே சங்கரன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் சுரேஷ்குமார் (வயது 25). இவர் தேரூர் பஞ்சாயத்தில் குப்பை அள்ளும் வண்டியில் டிரைவராக பணியாற்றி வந்தார். அங்கு தேரூரை சேர்ந்த சுபாஷ் மனைவி வித்யா (31) என்பவர் தூய்மை பணியாளராக பணியாற்றினார். வித்யாவுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

வேலை நிமித்தம் காரணமாக வித்யாவும், சுரேஷ்குமாரும் அடிக்கடி சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. பின்னர் இது அவர்களுக்கிடையே நெருக்கத்தை ஏற்படுத்தி, கள்ளக்காதலாக மாறியது. 2 குழந்தைகளுக்கு தாய் என்பதை மறந்த வித்யா, சுரேஷ்குமாருடன் பல இடங்களுக்கு சென்று சுற்றி வந்ததாக தெரிகிறது.

மகனின் நடத்தையில் சந்தேகமடைந்த பெற்றோர் அவரை கண்டித்தனர். அதே சமயத்தில், திருமணம் செய்து வைத்தால், கள்ளக்காதலை கைவிட்டு ஒழுங்காக வாழ்வான் என நினைத்த அவர்கள், சில மாதங்களுக்கு முன்பு நெல்லை மாவட்டம் பாபநாசம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை, சுரேஷ்குமாருக்கு மணமுடித்து வைத்தனர்.

அதன்பிறகு கள்ளக்காதலை கைவிட்டு, மனைவியுடன் அவர் சந்தோசமாக வாழ்ந்து வந்தார். ஆனால் வித்யாவால், தனது கள்ளக்காதலனை மறக்க முடியவில்லை. தவியாய், தவித்து வந்ததாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் வித்யாவும், சுரேஷ்குமாரும் தனிமையில் சந்திக்கும் சந்தர்ப்பம் உருவான போது, கள்ளக்காதல் மீண்டும் அவர்களுக்கிடையே தொற்றிக் கொண்டது. இதனை அறிந்த கணவர் சுபாஷ், வித்யாவை கண்டித்தார். ஆனால் வித்யாவுக்கு, கள்ளக்காதலன் மீதான மோகம் அதிகமானது.

இந்தநிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கள்ளக்காதல் ஜோடி ஊரை விட்டு வெளியேறியது. நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள செட்டிகுளம் கிராமத்திற்கு சென்று, அங்கு கணவன்-மனைவி என பொய்யான தகவலை கூறி ஒரு வீட்டில் வாடகைக்கு குடியேறினார்கள். அங்கிருந்து சுரேஷ்குமார் கூடங்குளம் பகுதியில் கூலிவேலைக்கு சென்று வந்தார்.

இதற்கிடையே சுபாஷ் தனது மனைவியை காணவில்லை என்று சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது, செட்டிகுளம் பகுதியில் 2 பேரும் இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து சுசீந்திரம் போலீசார் செட்டிகுளம் விரைந்தனர். போலீசார் வருவதை அறிந்த கள்ளக்காதல் ஜோடி, தங்களை சேர்ந்து வாழ விட மாட்டார்கள் என நினைத்து, சாக முடிவெடுத்தனர். அதன்படி இருவரும் விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கூடங்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சுரேஷ்குமார் பரிதாபமாக இறந்தார். வித்யாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இதுகுறித்து கூடங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கள்ளக்காதலியுடன் விஷம் குடித்த புதுமாப்பிள்ளை இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story