சென்னையில் இன்று முதல் மின்சார ரெயில் சேவை அதிகரிப்பு: ரெயில்வே கோட்டம் அறிவிப்பு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 14 Jun 2021 3:18 AM GMT (Updated: 14 Jun 2021 3:18 AM GMT)

சென்னையில் இன்று முதல் மின்சார ரெயில் சேவை அதிகரிப்படும் என்று ரெயில்வே கோட்டம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை, 

சென்னையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் இன்று (திங்கட்கிழமை) முதல் ஊரடங்கில் மேலும் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், சென்னை ரெயில்வே கோட்டமும், மின்சார ரெயில் சேவையை அதிகரித்தும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 7-ந் தேதி முதல் 208 ஆக இருந்த மின்சார ரெயில் சேவையின் எண்ணிக்கையை, 279 ஆக சென்னை ரெயில்வே கோட்டம் அதிகரித்தது. இந்த நிலையில் இன்று முதல் மேலும் கூடுதலாக மின்சார ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

மூர்மார்க்கெட், ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி மார்க்கத்தில் 113 மின்சார ரெயில் சேவையும், மூர்மார்க்கெட், கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை மார்க்கத்தில் 60 சேவையும், சென்னை கடற்கரை-வேளச்சேரி மார்க்கத்தில் 36 ரெயில் சேவையும், கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் மார்க்கத்தில் 120 ரெயில் சேவையும் என 323 மின்சார ரெயில் சேவை இயக்கப்படும்.

அதேபோல், ஆவடி-பட்டாபிராம் மிலிட்டரி சைடிமங் மார்க்கத்தில் 4 மின்சார ரெயில் சேவையும், பட்டாபிராம்-பட்டாபிராம் மிலிட்டரி சைடிமங் மார்க்கத்தில் 10 மின்சார ரெயில் சேவையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் சென்னையில் 343 மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்படும். மேலும் 20-ந் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் 98 மின்சார ரெயில் சேவைகளும் இயக்கப்படும்.

Next Story