கொரோனா தொற்று குறைந்த மாவட்டங்களில் புதிய தளர்வுகள் அமலுக்கு வந்தன டீக்கடைகள், சலூன் கடைகள், பூங்காக்கள் திறப்பு


கொரோனா தொற்று குறைந்த மாவட்டங்களில் புதிய தளர்வுகள் அமலுக்கு வந்தன டீக்கடைகள், சலூன் கடைகள், பூங்காக்கள் திறப்பு
x
தினத்தந்தி 14 Jun 2021 4:01 PM GMT (Updated: 14 Jun 2021 4:01 PM GMT)

கொரோனா தொற்று குறைந்த சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் ஊரடங்கில் புதிய தளர்வுகள் அமலுக்கு வந்த நிலையில் டீக்கடைகள், சலூன் கடைகள், அழகு நிலையங்கள் மற்றும் நடைபயிற்சி மேற்கொள்ள பூங்காக்கள் திறக்கப்பட்டன.

சென்னை,

கொரோனா தொற்று குறைந்த சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் ஊரடங்கில் புதிய தளர்வுகள் அமலுக்கு வந்த நிலையில் டீக்கடைகள், சலூன் கடைகள், அழகு நிலையங்கள் மற்றும் நடைபயிற்சி மேற்கொள்ள பூங்காக்கள் திறக்கப்பட்டன.

கூடுதல் தளர்வுகள்

தமிழகத்தில் நோய் தொற்று பரவாமல் தடுத்து, மக்களின் உயிர்களை காக்கும் வகையில், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கை வருகிற 21-ந் தேதி காலை 6 மணி வரை, மேலும் ஒரு வார காலத்துக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆனால் தொற்று அதிகமாக உள்ள கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இங்கு கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படவில்லை.

இந்த மாவட்டங்களை தவிர, இதர 27 மாவட்டத்தில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுடன் கூடுதலாக பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

டீ, சலூன் கடைகள் திறப்பு

அதன்படி சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் நேற்று காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை டீக்கடைகள், பலகார கடைகள், அழகு நிலையங்கள், சலூன் கடைகள் திறக்கப்பட்டன.

காலை 6 மணி முதல் 9 மணி வரை 3 நேரத்திற்கு அரசு பூங்காக்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்கள், விளையாட்டு திடல்களில் பொதுமக்கள் நடைபயிற்சிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான நிர்வாக பணிகள் நேற்று முதல் தொடங்கின.

தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள்

இதர தொழிற்சாலைகளும் 33 சதவீதம் பணியாளர்களுடன் இயங்கின. தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் 20 சதவீத பணியாளர்கள் பணிபுரிந்தனர்.

இதேபோல செல்போன், அதனை சார்ந்த பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள், கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை திறந்திருந்தன.

மேலும் மிக்சி, கிரைண்டர், தொலைக்காட்சி விற்பனை, பழுது பார்க்கும் கடைகளும் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட்டன.

27 மாவட்டங்களில் அரசு அலுவலகங்களில் உள்ள இ-சேவை மையங்களும் நேற்றுமுதல் செயல்பட தொடங்கின.


Next Story